சென்னையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 42 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெட்ரோ சேவை இன்று துவங்கியது.
தமிழகத்தில் இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் மெட்ரோ ரெயில்கள் 50 சதவீத பயணிகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மெட்ரோ நிர்வாகம் அளித்த அறிக்கை :
சென்னையில் இன்று முதல் காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப இந்த நேரத்தில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரையும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பரங்கி மலை வரையும் மெட்ரோ ரெயில் சேவை இயங்குகிறது.
இந்த வழித்தடங்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படும் எனவும் மற்ற நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து பொதுமக்கள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்த வேண்டும் எனவும் ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.