தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் ஊரடங்கு முன்னிட்டு, அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்-
“தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு, ஏழை ஏளிய மக்களின் நலன் கருதி, அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவு விலையில்லாமல் 31.5.2020 வரை வழங்கப்பட்டு வந்தது.
தற்போது சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் தீவிர ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், இப்பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லாமல் உணவு வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், முதியோர், நோயுற்றோர் மற்றும் ஆதரவற்றோர்களின் நலன் கருதி, தற்போது இயங்கி வரும் சமுதாய உணவுக் கூடங்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு அவர்களின் இல்லங்களுக்குச் சென்று விலையில்லாமல் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ள இந்நிலையில், இப்பகுதிகளில் உள்ள சமுதாய சமையல் கூடங்களை மேலும் வலுப்படுத்தி, போதுமான அளவு உணவு சமையல் செய்து, இந்த உணவை, விலையில்லாமல், தேவைப்படும் முதியோர், நோயுற்றோர் மற்றும் ஆதரவற்றோர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன்.
இந்த நடைமுறை நாளை (19.6.2020) முதல் 30.6.2020 வரை செயல்பாட்டில் இருக்கும்’” இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
