“பாலா” தமிழ் சினிமாவில் தவிர்க்க இயலாத பெயர் . பாலாவும் அவர் படம் பேசும் விசயங்களும் யாரும் தொட தயங்கும் ஒன்று . விளிம்புநிலை மனிதர்களின் மற்றொரு பக்கத்தை காட்ட யாரும் பிரயதனப்படாத பொழுது அதனை மெனக்கெட்டு தன் எழுத்தின் மூலம் நம்மை உலுக்க செய்யும் அளவிற்கு படத்தை தருவது பாலாவின் தனி ஸ்டைல் ….!
சினிமா இயக்குனர் ஆக வேண்டும் என சென்னைக்கு ஓடி வந்து, பல கஷ்டங்களை சந்தித்து ,பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக சேர்ந்து அவ்வாறு வாய்ப்பு கிடைத்த படங்களில் தனது முழு நேர அர்ப்பணிப்பை தந்தவர் பாலா.
“வண்ண வண்ண பூக்களில்” முதன் முதலாக டைட்டில் கார்டில் பாலாவின் பெயரை இணை இயக்குநராக போட்டார் பாலு மகேந்திரா அதுவரை அவர் யார் பெயரையும் இணை இயக்குநராக போட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த படத்தில் பாலாவின் உழைப்பை பார்த்த தயாரிப்பாளர் தாணு 85 ஆயிரம் ரூபாயை அவருக்கு சம்பளமாக தந்தார் . டைரக்டர் ,ஹீரோக்கு பிறகு அந்த படத்தில் பாலாவுக்குதான் அதிக சம்பளம்…!
மறுபடியும் படத்திலும் பணியாற்றி விட்டு தன் ஒரு படம் எடுக்க நினைப்பதாக தன் குருநாதரிடம் கூறி கதைக்கான களத்தை எழுத ஆரம்பித்தார் …!
“அணு அணுவாய் சாவதற்கு முடிவான பின் காதல் என்பது சரிதான் “
அறிவுமதியின் இந்த வரிகளில் பிறந்த கதைதான் ” சேது”
மேலும் பாலா ஏர்வாடி சென்று இருந்தபோது மனநிலை பாதித்த மக்களின் வாழ்வியலை கண்டு அதிர்ந்து போனார்.. தான் அங்கு சந்தித்த காட்சிகளையும் , அறிவுமதியின் அந்த வரிகளையும் வைத்து ஒரு கதையை உருவாக்கினார் …!
படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்தது ராஜாவின் இசை, படத்தின் மிகப்பெரிய விலாசம் இசைஞானி மட்டுமே. ஒவ்வொரு பாட்டும் கதைக்கு ஏற்ற வகையில் மிகச்சிறப்பாக மெட்டமைத்து இருந்தார் இசைஞானி…!
வார்த்தை தவறி விட்டாய் ,எங்கே செல்லும் அந்த பாதை பாடல்கள் ராஜாவின் குரலில் கதையின் ஒட்டு மொத்த சோகத்தையும் படம் பார்ப்போரின் மனதில் ஏற்றி விட தமிழ் சினிமாவின் மைல்கல்லாக மாறிய படம் சேது …!
தன்னை எந்தளவுக்கும் வருத்திக்கொள்ளக் கூடிய இன்னொரு நடிகனாகவே இருந்த விக்ரம் தனது சினிமா வாழ்க்கையின் முதல் வெற்றியை ருசித்த படம் . இந்த ஒரு வெற்றிக்காக விக்ரமின் காத்திருப்பு என்பது பெரிய பகீரத பிராயத்தனம். தன்னுடைய முதல் படத்தில் இருந்து பல தோல்விகளைச் சந்தித்த விக்ரம், கடைசி வாய்ப்பாக தன் கையில் எடுத்தது ‘சேது’ படத்தைதான்…!
படத்தின் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் ராதிகாவைச் சந்தித்த விக்ரம், ‘நான் இப்போ ‘சேது’னு ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன். இந்தப் படமும் எனக்கு சரியா போகலைன்னா நீங்க எடுத்துட்டு இருக்கிற ‘சித்தி’ நாடகத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க’ன்னு கேட்டாராம். ‘சேது’ விக்ரமுக்குக் கொடுத்தது வரலாற்று வெற்றி. ஒன்பது ஆண்டுகால காத்திருப்புக்குக் கிடைத்த விஸ்வரூப வெற்றி. ..!
சிவக்குமார் ஸ்ரீமன், மோகன் வைத்யா, அபிதா என பாத்திரங்களுக்கான நடிக தேர்வுகளும் என்று எல்லாமே படத்தின் வெற்றிக்கு காரணங்களாயின.
சேது தமிழ் சினிமாவின் அடுத்த தேவதாஸாக மாறியது …!
இன்று சேதுவை மையமாக வைத்தே பல திரைப்படங்கள் வந்து வெற்றி பெற்று வருகின்றன இருந்தாலும் சேது பாலாவின் டிரேட் மார்க் ..!
வெற்றிப் படமாக அறியப்படும் சேது படம் வெளியாவதற்கு முன் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம் .
அப்போதைய முன்னணி தயாரிப்பாளர்கள் எல்லாம் இந்தப்படத்தை நம்பவில்லை. பிரிவியூஷோவிலேயே நூறுநாட்கள் ஓடியபடம் என்று சொல்லப்பட்ட படம் இது. தனது தயாரிப்பாளரிடம் நீங்களே இதை ரிலீஸ் பண்ணுங்க இந்த படம் சரியா போகும் அப்படி போகலனா நான் வெற்று ஸ்டாம்ப் பேப்பரில் கையைழுத்து போட்டு தரேன் இதுக்கு அப்பறம் நான் சம்பாதிக்கும் அனைத்தும் உங்களுக்கே என்று கூறி படத்தை வெளியிட வைத்தார் பாலா …!
படம் ரிலீஸான ஒரு வாரம் வரை ஆடியன்ஸ் யாரும் படம் பார்க்க வரவில்லை . தியேட்டர்ல இருந்து படத்தை தூக்கும் திட்டத்தில் விநியோகஸ்தர்கள் முடிவு செய்த நேரத்தில் ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளில் சேதுவின் விமர்சனம் வந்தது பத்திரிகைகள் படத்தை கொண்டாடின. அதன் பிறகுதான் படத்தைப் பார்க்க ரசிகர்கள் நிறைய பேர் தியேட்டருக்கு வர கிட்டத்தட்ட 300 நாளுக்கு மேலே படம் ஓடி தேசிய விருதினையும் தட்டிச் சென்றது …!
தமிழ் சினிமா பல காதல்களை பார்த்து கொண்டு இருந்தாலும் ,இனியும் பல வகையான காதல்களை காட்டப்பட இருந்தாலும் காதல் படங்களில் தவிர்க்கவே இயலாத ஒரு படம் ” சேது “