ஐ.பி.எல் என்கிற நம்ம ஊரு பிரான்சீஸ் லீக்ன்னு வந்துட்டாலே ஏலத்துல ஆரம்பிச்சு அந்த தொடர் முடியுற வரைக்கும் சமூக வலைதளம் முழுக்க அது பற்றிய விவாதம் தான் பரவலாக பேசப்படும்,சில சமயம் சண்டையாக மாறி ரத்தக்காவு வாங்கிய படலமெல்லாம் நம்ம பார்த்ததுண்டு,
இறுதி போட்டியான கடைசி கட்டத்துக்கு ஐ.பி.எல் போட்டி வந்துவிட்டது நாம் அனைவரும் அறிந்ததே,
நாம் எங்கு விளையாடுகிறோம் எந்த நாட்டிற்காக விளையாடுகிறோம்,எந்த உள்ளூர் அணிக்காக விளையாடுகிறோம் என்பதெல்லாம் முக்கியம் அல்ல,நம்ம அங்க என்ன செஞ்சு இருக்கோம்,நம்மளோட பங்களிப்பு அங்க என்ன, நம்மளால அந்த அணி எப்படி மாற்றம் பண்ணுச்சு,நம்ம சேவை அவங்கள பூர்த்தி செஞ்சுச்சா இது தான் வெளிநாட்டுல இருந்து ஏலம் எடுக்கப்பட்டு நம்ம தொடர்ல விளையாடுற வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களின் தேவையாக அவர்களின் மனதில் கேட்கப்படும் கேள்விகள்,இது ஒவ்வொரு நாட்டு ப்ளேயேர்ஸ்க்கு பொருந்தும்,
முத்து முத்தாய் நவரத்தின மணிகளை கையில் ஏந்தி மாளிகை தெருவில் வலம் வந்தார்கள் ஆப்பிரிக்க நாட்டு அரண்மனை தூண்கள் என்பது போல் இந்த தொடரில் என்னை கவர்ந்த இரத்தின மணிகளை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்,
*
காகிஸோ ரபாடா
DC – அணியோட பௌலிங் டிபார்ட்மென்ட்ல மொத்த நம்பிக்கையா முன்ன நிக்குற ஒரு எல்லை சாமின்னு சொல்லாம்,இஷாந்த்,மிஸ்ரா,அஸ்வின் (சில போட்டிகள்) – ன்னு அவங்க நம்பிக்கை நட்சத்திரங்கள் காயம் காரணமா சிரமத்துல இருந்தப்போ முழு பொறுப்பையும் ஏத்துக்கிட்டு இப்போ Purple Cap – லிஸ்ட்ல Highest Wicket Taker – ஆ இருக்காரு,பஞ்சாப்க்கு எதிரான சூப்பர் ஓவர்ல பூரான்க்கு வீசுன யார்க்கரும் போன வருஷம் இதே சூப்பர் ஓவர்ல ரஸல்க்கு வீசுன யார்க்கரும் சொல்லும் ரபாடான்ற சிறுத்தை எப்படி பாயும்ன்னு,

நம்ம ஊரு கிராமத்துல ஊர்
எல்லைக்கு கருப்பசாமி எப்படியோ
அப்படித்தான் இந்த ரபாடா DC – க்கு,
ஊர் காவலனா நின்னு
தன்னோட குடும்பத்துக்கு
என்ன தாண்டி எந்த வித
அசம்பாவிதமும் ஏற்படாம பாத்துக்க
தென்ஆப்ரிக்கால இருந்து குலம்
காக்க வந்த கருஞ்சிறுத்தை கருப்பசாமி,
*
அன்ரிச் நோர்ட்ஜே
காயம் காரணமா DC – யோட பௌலிங் டிபார்ட்மென்ட் வலுவிழந்தது ஒரு பக்கம்,ரபாடா மேல எக்ஸ்ட்ரா பிரஷர்ன்னு இருந்தப்போ ஏலத்துல கிறிஸ் வோக்ஸ்க்கு பதிலா உள்ள வந்த ஒரு தென்ஆப்ரிக்கா பிளேயர் இவரு,டெஸ்ட் போட்டிகளுக்கான ஒரு ப்ரோடக்ட் தான் நோர்ட்ஜே T20 ஃபார்மட்டுக்கு செட் ஆவாரான்னு எல்லாரும் கேள்வி எழுப்புன நேரத்துல ரபாடாக்கு பக்க பலமா DC – அணிய காக்க வந்த ஒரு அய்யனார் தான் இந்த நோர்ட்ஜே,
கன்சிஸ்டெண்சியா 150 KMPH குறையாம பௌலிங் போடுற துப்பாக்கியில இருந்து சீறிபாஞ்சு பிசிறு தட்டாம வெளிவர ஒரு தோட்டா,இதோ இந்த தொடர்ல ராஜஸ்தான் அணி பட்லர நோக்கி தோட்டா பாஞ்சத நம்ம பாத்தோமே,
ஊர் மக்களுக்கு ஒரு பிரச்சனைனா எப்படி அருவா எடுத்துட்டு அய்யனார் பாதுகாப்பா எழுந்து நிற்பாரோ அப்படி தன் வேகத்தில் எழுச்சி பெற்று நிற்கிறார் நோர்ட்ஜே,

மொத்த ஐ.பி.எல் வரலாற்றுலேயே அதிக வேகத்தில் பௌலிங் வீசியவர்கள் வரிசையில் இருந்த தன் சக அணி பிளேயரான ஸ்டெய்னை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் நோர்ட்ஜே,
Anrich Nortje – 156.2kmph
Anrich Nortje – 154.8kmph
Dale Steyn – 154.4kmph
Anrich Nortje – 154kmph
Kagiso Rabada – 153.9kmph
முதல் ஐந்து இடங்களில் மூன்று இடங்களை பிடித்து தன் பௌலிங் வேகத்தில் தனக்கான டாமினேஷனை சரியாக செய்து காய் நகர்த்துகிறார் நோர்ட்ஜே,
*
கிறிஸ் மோரிஸ்
தென் ஆப்ரிக்காவோட ரெண்டு பௌலிங் பவர் ஹவுஸ் பத்தி பாத்தோம்,அடுத்து நம்ம பார்க்க போறது கிறிஸ் மோரிஸ்,இதே தென் ஆப்ரிக்காவை சேர்ந்த பௌலிங் ஆல்ரவுண்டர்,
இதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ்,ராஜஸ்தான் ராயல்ஸ்,டெல்லி டார்டெவில்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக இத்தனை காலம் ஐ.பி.எல்லில் ஆடியவர் இந்த வருடம் பத்து கோடிக்கு பெரிதான விலையில் பெங்களூரு அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட நேரத்தில் இருந்தே அந்த விலைக்கு மோரிஸ் தகுதியானவரா என்ற கேள்விகள் சரமாரியாக எழுந்து வாக்குவாத மேதை தொடங்கியது,

காயம் காரணமாக முதலில் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்தவர் அடுத்த ஒன்பது போட்டிகளில் பெங்களூர் அணிக்காக விளையாடி 11 விக்கெட்டுகளையும் எடுத்தார்,இவர் விளையாடிய போட்டிகளில் பௌலிங் யூனிட்டில் வழக்கமாக வீக்காக இருக்கும் பெங்களூர் அணியின் பௌலிங் டிபார்ட்மென்ட் கொஞ்சம் வலுவடைந்தது என்றே சொல்லலாம்,முதலுக்கு மோசம் இல்லை,வந்தவரை லாபம் தான் என்ற ஸ்ட்ராட்டஜி தான் கிறிஸ் மோரிஸை பொறுத்தவரையில்,பெத்த கல்லு சின்ன லாபம் தான்,ஆனா சேதாரம் இல்லன்னு வெளிப்படையா கூட எடுத்துக்காட்டு சொல்லலாம் இங்க,
*
ஃபாஃப் டூ ப்லெஸிஸ்
சென்னை அணியோட ஆஸ்தான ஆளு,சென்னை ஷார்க்ஸ் டீம் பத்தி எங்களுக்கு தெரியும் ஏதோ உயிர கொடுத்து விளையாடுவீங்களாமேன்னு சென்னை 28 – 2 ல ஒரு வசனம் வரும்,இது எல்லா வருஷமும் சென்னை அணிக்கு பொருந்தும் ஆனா இந்த வருஷத்தை தவிர,ஆனா இந்த ஆளுக்கு இந்த வசனம் ரொம்பவே செட் ஆகும், யுவராஜ் கைஃப் காம்போ எப்படி இந்திய அணிக்கு பீல்டிங்ல அடித்தளம் போட்டு வச்சாங்களோ அது மாதிரி ஜடேஜா மற்றும் ஃபாஃப் டூ ப்லெஸிஸ் இருவரும் சென்னை அணியோட பாயும் புலிகள்,புலி தன்னோட தேவைக்கு இரைய எப்படி அடிச்சு பிடிங்கிக்குமோ அது போல பேட்ஸ்மேன் அடிக்கக்கூடிய ஷாட்ஸ் எதுவாக இருந்தாலும் தடுத்து நிறுத்துவது என்றாலும் சரி சீறி பாய்ந்து கேட்ச் எடுப்பது என்றாலும் சரி இவர்கள் இருவரும் சகலகலா வல்லவர்கள் அதிலும் குறிப்பா ஃபாஃப் டூ ப்லெஸிஸ் கில்லாடி இந்த காம்போல,

அதே போல சென்னை அணி இந்த தொடர்ல தொடர்ந்து தோல்விகள சந்திச்சபோது சேவியராக களத்தில் நின்று புயல் நேரத்தில் ஆபத்தில் கலங்கரை விளக்கம் நோக்கி திசை தேடி செல்லும் கப்பலை தனி ஒருவனாய் இயக்கி வந்து கரை சேர்த்த காப்பான் போல் இந்த தொடர் முழுவதும் தான் ஒரு சீனியர் பிளேயர்,அடுத்து வரப்போகும் தலைமுறைக்கு பிரஷர் ஹாண்ட்லிங்னா என்ன எப்படி கையாளணும் என பாடம் புகத்தினார் என்றே சொல்ல வேண்டும்,ஃபாஃப் டூ ப்லெஸிஸ் ஒரு நரி மாதிரி,சாதுர்யத்தை பயன்படுத்தி தந்திரமாக எதிரே இருக்கும் பௌலர்களை தன் கட்டுப்பாட்டில் வைப்பவர்,
*
குயின்டன் டி காக்
ஒருத்தனுக்கு பயம் இருக்கவர தான் அவன் மத்தவங்கள பார்த்து அடங்கி போவான்,அதுவே அவனுக்கு பயம் இல்லேனா எகிறிட்டு போவான்,ஆனா சிலர் பார்க்க ரொம்ப சாதுவா இருப்பாங்க,ஆனா சாது மிரண்டா நாடு தாங்காதுன்னு சொல்லிருக்காங்கல அது போல தான் இந்த
குயின்டன் டி காக்,
பிட்ச்ல என்ன செட்டில் ஆக விட்டிங்கன்னா அடுத்து நடக்கப்போற சம்பவத்துக்கு நான் பொறுப்பில்லன்னு 10000 வாலா சிவகாசி பட்டாசா சும்மா சிதறடிக்குறதுல சொல்லி அடிக்கிற கில்லி,
அதுவும் இந்த சீசன் சொல்லவே வேணாம்,ரோஹித் காயம் மற்றும் மோசமான பார்ம்ல இருந்தும் அதை Overshade பண்ணுற மாதிரி இந்த பக்கம் குயின்டன் டி காக் தன்னோட நேச்சுரல் கேம விளையாடி மும்பை அணிக்கு பெரிய ஆலமரமா தொடக்கத்துல நிக்குறார்,

ஆளு பாக்க கொஞ்சம் பொடியன் தான் ஆனா பௌலர்ஸ சாத்து சாத்துன்னு சாத்துறதுல பையன் கொஞ்சம் இல்ல ரொம்பவே கெட்டிக்காரன்,
*
ஏபி டிவில்லியர்ஸ்
இவர பொறுத்தவரைக்கும் ரொம்ப எதார்த்தமா ஒரு எடுத்துக்காட்டு சொல்லலாம்,
வீட்ல பவர் கட் ஆச்சுன்னா அம்மா டார்ச் லைட்டோ அல்லது மெழுகுவர்த்திய தேடியோ அலைவாங்க இருட்டுக்குள்ள,அப்போ நம்ம பையன் டக்குன்னு மொபைல் டார்ச்ச ON பண்ணியவுடன் அம்மா முகத்துல ஒரு சின்ன புத்துணர்ச்சி பிறக்கும், அந்த புத்துணர்ச்சியோட அர்த்தம் என்னன்னா அப்போ அந்த நேரத்துக்கு ஒரு ஒளி வேணும் இருட்டுல இருந்து தப்பிக்க அவ்வளோ தான்,அந்த மொபைல் டார்ச் வெளிச்சத்தின் சின்ன ஒளி தான் அவர்களின் வீட்டில் அகல்விளக்கா மின்னும்,
இப்படி ஊரே இருட்டுல மாட்டிகிட்டு வெளிச்சம் தேடி அலையுறப்போ ஒருத்தன் வருவான் அவங்கள இருட்டுல இருந்து பாதுகாக்க தூய ஒளி சுடராய்,
அப்படி ஒரு உன்னதமான தூய ஒளி சுடர் தான் இந்த ஏபி டிவில்லியர்ஸ்,
தண்ணீர் பஞ்சத்தினால் தவிக்கும் ஊரில் இவன் மட்டும் ஊத்து தண்ணீராக மண்ணிலிருந்து எதிர்பார்ப்பின்றி வெளிவந்து மக்களின் தாகத்தை போக்குகிறான்,ஆனால் மக்களோ ஊத்து தண்ணீர் கிடைத்தால் போதும் என்றே இருக்கிறார்கள்,தண்ணீர் பஞ்சம்,மழையின்றி வறட்சி போன்றவற்றை சரி செய்ய மரத்தை வளர்ப்போம் என்ற யோசனை அவர்களுக்கு தோன்றவில்லை,கடைசி வரை ஊத்து தண்ணீரை நம்பியே இருக்கிறார்கள்,

இந்த மனுஷனை பற்றி பக்கம் பக்கமாக எழுதுவதற்கு பதில் இந்த எடுத்துக்காட்டு போதுமானது என்றே நினைக்கிறேன்,
ஏபி டிவில்லியர்ஸ் ஒரு நாகரிக கோமாளியாக தான் இருக்கிறார் தேசிய அணியிலும் சரி பிரான்சீஸ் அணியிலும் சரி,ஆனாலும் அரசன் எங்கிருந்தாலும் அரசனே,ஊர் ஒதுக்கி வைத்தாலும் அரசன் தன் மக்களை அரவணைக்க தான் செய்வான்,
*
இந்த ஐ.பி.எல் தொடரில்
எந்தன் மனதை கவர்ந்த
தென் ஆஃப்ரிக்கா தங்கங்கள்
என்று சொன்னால் மிகையாகாது..!!
இணைந்திருங்கள்
என் எழுத்துக்களுடன்
~ நன்றி : ) 🙏❤️
Images Courtesy: Indian Premier League Twitter Handle!