தனிமைப்படுத்துதல் காலக்கட்டம் முடிவடைந்து தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார் நடிகர் பிரித்விராஜ்.
கொரோனா ஊரடங்கு காரணமாக ஜோர்தானில் மாட்டிக்கொண்ட மலையாள நடிகர் பிரித்விராஜ் மற்றும் அவருடைய படப்பிடிப்புக் குழுவினர் தற்போது இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார்கள்.
ஆடுஜீவிதம் (Aadujeevitham) என்கிற படத்துக்காக நடிகர் பிரித்விராஜ் மற்றும் படக்குழுவினர் ஜோர்தான் சென்றார்கள். பிரித்விராஜ், அமலா பால் நடிப்பில் இப்படத்தை பிளெஸ்ஸி இயக்குகிறார். இசை – ஏ.ஆர். ரஹ்மான்.
ஜோர்தானில் வேடி ரம் என்கிற பாலைவனத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் மார்ச் மாதத்தில் இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இந்தச் சூழலில் ஜோர்தானில் மாட்டிக்கொண்டார்கள் படக்குழுவினர். மார்ச் இறுதியில் ஜோர்தானில் படப்பிடிப்பு நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. எனினும் இதுபோன்ற கடினமான சூழலில் ஜோர்தானில் எடுக்கவேண்டிய காட்சிகளை முழுமையாக எடுத்துவிட்டதாக ஃபேஸ்புக்கில் தெரிவித்தார் பிரித்விராஜ்.
பிரித்விராஜ் உள்ளிட்ட 57 பேர் கொண்ட படக்குழுவினர் கொச்சிக்கு சமீபத்தில் திரும்பினார்கள். அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு குறிப்பிட்ட நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு அவரவர் வீடுகளுக்குத் திரும்புவார்கள் எனக் கூறப்பட்டது.
கொச்சியில் உள்ள ஒரு விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நடிகர் பிரித்விராஜுக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை நடைபெற்றது. அதில் நெகடிவ் என முடிவு வந்தது. இத்தகவலை இன்ஸ்டகிராமில் பிரித்விராஜ் வெளியிட்டார். மேலும் இரு வாரம் தனிமைப்படுத்துதல் நடைமுறை முடிந்தபிறகே வீட்டுக்குத் திரும்புவேன் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் தனிமைப்படுத்துதல் காலக்கட்டம் முடிவடைந்து தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார் நடிகர் பிரித்விராஜ். தன் குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு இத்தகவலை அவர் தெரிவித்துள்ளார்.

I will not apologise: Rajinikanth about his comments on Periyar