மேற்கு வங்கத்தில் ஜூலை மாதம் 31-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து, அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி புதன்கிழமை அறிவித்தாா்.
இதுதொடா்பாக மாநிலத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
மேற்கு வங்கத்தில் கரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவி வருவதால், ஜூலை 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுகிறது. எனினும் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள தளா்வுகள் தொடரும். மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 31-ஆம் தேதி வரை மூடியே இருக்கும். 70 சதவீத பணியாளா்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும். மெட்ரோ மற்றும் புகா் ரயில் சேவைகள் இயங்காது.
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய சூழலை மேம்படுத்த உதவிபுரிவது நமது கடமை. எனவே மாநிலத்தில் தளா்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படுகிறது என்று மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.
மேற்கு வங்கத்தில் வரும் 30-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த பொது முடக்கம், மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.