சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நாளை பொதுமக்கள் பயணிக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு தெற்கு ரயில்வே தினசரி 244 புறநகர் சிறப்பு மின்சார ரயில்களை இயக்கி வருகிறது. இதற்கிடையே, கடந்த மாதம் 23-ம் தேதி முதல் அத்தியாவசிய பணிகள் பட்டியலின்கீழ் வராத பெண் பயணிகளை சாதாரண நேரங்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் முழுவதும் பயணிக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்தது.
இருப்பினும், அத்தியாவசிய பணியாளர் பட்டியலின்கீழ் வராத பெண் பயணிகள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பயணிக்க அனுமதி இல்லை. மற்ற நேரங்களில் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மின்சார ரயில்களில் நாளை பொதுமக்கள் பயணிக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், பீக் ஹவர்சில் பொதுமக்கள் மின்சார ரயில்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் இல்லாத நேரத்தில் (10 AM – 4 PM) அனைவரும் பயணம் செய்ய தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.