ரெம்டெசிவர் மருந்துகளைக் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மக்களின் உயிர் காக்கும் ரெம்டெசிவர் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பதுக்கியும், அதிக விலைக்கு கள்ளச் சந்தையில் விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களின் உயிர் காக்கும் பெரும் பொறுப்பை முதன்மை கடமையாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது எனது தலைமையிலான அரசு. அதற்கு நேர் எதிராக செயல்படுபவர்களின் போக்கை கடுமையான நடவடிக்கையால் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
நாள்தோறும் அதிகரித்துவரும் நோய்த் தொற்று எண்ணிக்கைகள் இறப்புகளையும் முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. மக்களுக்கான இந்த அரசு இரவு பகல் பாராது செயல்பட்டுவருகிறது.
அதேபோல் எளிய மக்கள் கூட தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பை தாண்டி அரசின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு மக்களின் உயிரைக் காப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். அதேநேரத்தில் சில சமூக விரோதிகள் ரெம்டெசிவர் மருந்துகளை பதுக்கி கள்ளச்சந்தையில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.
அதுபோலவே ஆக்சிஜன் சிலிண்டர்களை மிக அதிக விலைக்கு ஆங்காங்கே சிலர் விற்பது தொடர்பான குற்றச்சாட்டுகளும் வருகின்றன. பேரிடர் காலத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகக் கடுமையான குற்றமாகும்.
தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் உயிரின் மீதும் அக்கறை கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வரும் நிலையில் அதற்கு மாறாக ரெம்டெசிவர் மருந்துகளை பதுக்குவோர் மீதும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்” என முதல்வர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

