குடும்பத்துடன் சில்லுக்கருப்பட்டி படம் பார்த்த நடிகை சாய் பல்லவி அப்படத்தின் இயக்குநரை பாராட்டி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் திரைத்துறை பிரபலங்கள் பலரும், தங்களுக்கு கிடைத்த இந்த நேரத்தை பிடித்தபடி செலவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சில்லுக்கருப்பட்டி பட இயக்குநர் ஹலீதா ஷமீம், ஊரடங்கின் பெரும்பாலான நேரம் எனக்கு மன அழுத்தத்தை தருகிறது. அந்த நேரத்தில் எனக்கு தேவதை குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாகக் கூறி சாய் பல்லவியின் மெசேஜை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சாய் பல்லவி ஹலீதா ஷமீம்க்கு அனுப்பிய அந்த குறுஞ்செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, “வணக்கம் ஹலிதா, படம் பார்த்து முடிந்ததும் நானும் எனது பெற்றோரும் மகிழ்ச்சியை உணர்ந்தோம். உங்களுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதற்கு நன்றி. இது போன்ற பல ரத்தினங்களை நீங்கள் உருவாக்க வேண்டும். உங்களுக்கு என்னுடைய அன்பும், பிரார்த்தனைகளும்” என்று கூறியுள்ளார்.