தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 4.90 லட்சம் கிலோ மருத்துவ கழிவுகள் சுத்திகரிப்பானில் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டு உள்ளது என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.
கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் சேரும் மருத்துவ கழிவுகளை 2 அடுக்கு பைகளில் கசிவுகள் ஏற்படாத வாறு சேகரிக்கப்படுகிறது. அதனை கையாள ஜி.பி.எஸ். கருவியுடன், மூடப்பட்ட வாகனங்களில் ஏற்றி தமிழகத்தில் உள்ள 11 பொதுமருத்துவக்கழிவுகள் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அதேபோல் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள், முகாம்கள், வீடுகளில் சேரும் மருத்துவக்கழிவுகள் 2 அடுக்கு கொண்ட மஞ்சள் நிற பைகளில் சேகரிக்கப்பட்டு துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்தப்பணியை கண்காணிக்க குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
இதுதவிர வீடுகளில் பயன்படுத்தப்பட்ட முககவசங்களை சிறு துண்டுகளாக வெட்டி 72 மணி நேரம் காகித பைகளில் பாதுகாப்பாக வைத்துவிட்டு பொது கழிவுகளுடன் வெளியேற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிப்பதற்காக ‘செய்யக்கூடியவை’, ‘செய்யக்கூடாதவை’, தகவல்கள் அடங்கிய பலகைகள் வார்டுகள், ஆய்வகங்களில் வைக்கப்பட்டு உள்ளன.
எரித்து சாம்பல்
தமிழகத்தில் 202 மருத்துவமனைகள், ஆய்வகங்கள், 6 தனி ஆய்வகங்கள், 71 உள்ளாட்சி அமைப்புகளுடன் மருத்துவ கழிவுகள் கையாள்வதற்காக செல்போன், கணிணி மென்பொருள்கள் மூலம் தரவுகள் பராமரிக்கப்படுகிறது.
மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை மருத்துவமனைகள், ஆய்வகங்கள், முகாம்கள், வீடுகளில் இருந்து 4 லட்சத்து 90 ஆயிரத்து 46 கிலோ மருத்துவ கழிவுகள் அற்றப்பட்டன. இவற்றை 8 பொது மருத்துவக்கழிவுகள் சுத்திகரிப்பு நிறுவனங்களில் உள்ள எரிப்பானில் 1,200 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் எரியூட்டப்பட்டு சம்பலாக்கப்பட்டன. இந்த சம்பலை கும்மிடிபூண்டி மற்றும் விருதுநகரில் உள்ள தமிழ்நாடு கழிவு மேலாண்மை நிலையங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.