கொரோனா வைரஸில் சிக்கி உலகமே தவிக்கிறது. இந்தியாவிலும் இந்நோய் பரவி உள்ள நிலையில் நோய் பாதிக்கப்பட்டவர்களை காக்க டாக்டர்கள் போராடி வருகின்றனர். இதனால் அவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு டாக்டர்கள் உயிரிழந்தனர். அதிலும் டாக்டர் ஒருவர் இறந்தபோது அவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் சிலர் தடுத்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர்களுக்கு ஒரு பெரிய சல்யூட் கொடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோவில், இன்னும் கொஞ்சம் காலம் விதிமுறைகளை சரியாக பின்பற்றுங்கள். இது சீக்கிரத்தில் முடிந்துவிடும் என நம்புகிறேன். வீட்டிலேயே பத்திரமாக இருங்கள். குழந்தைகளையும், பெரியவர்களையும் பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள். நமக்காக உழைக்கும் அரசு அதிகாரிகள், போலீஸ், நர்ஸ்கள், தூய்மை பணியாளர்கள், பாராமெடிக்கல் பணியாளர்கள், ஊடகம் மற்றும் பத்திரிக்கை துறை நண்பர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.
இவர்களுடன் சேர்த்து இன்னொருவருக்கும் நன்றி சொல்லவே இந்த வீடியோ. அவர்களின் உயிர், குடும்பத்தை பற்றி யோசிக்காமல் கொரோனாவால் பாதிக்கப்பட்வர்களை குணப்படுத்த போராடும் மனித கடவுள்கள் டாக்டர்களுக்கு பெரிய நன்றி மற்றும் சல்யூட். சமீபத்தில் வந்த சில செய்திகள், சம்பவங்கள் அவர்களை ரொம்பவே காயப்படுத்தியிருக்கும். நம்முடைய அன்பு, ஆதரவை என்ன தோன்றுகிறதோ அதை #WeLoveDoctors என்கிற ஹேஷ்டேகுடன் சமூகவலைதளத்தில் போஸ்ட் செய்யுங்க. நாம அவர்களுடன் இருக்கிறோம் என சொல்கிற நேரம் இது. நம் அன்பும், மரியாதையும் அவர்களை போய் சேரட்டும். இந்த தருணத்தில் அவர்களுக்கு அது தேவை. உலகின் தலை சிறந்த சொல் செயல். செஞ்சுகாட்டுவோம். வீ லவ் டாக்டர்ஸ்.
இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Parvathy calls out misogyny in Arjun Reddy in front of Vijay Devarakonda