வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேற தற்காலிக தடை விதிக்க உள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் அமெரிக்கா மற்ற நாடுகளை விட அதிகமான பாதிப்புகளை சந்தித்துள்ளது. அங்கு 8,00,262 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அமெரிக்காவுக்கு குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் நிர்வாக உத்தரவில் விரைவில் கையெழுத்திடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டரில், “கண்ணுக்கு தெரியாத எதிரியின் தாக்குதல் காரணமாகவும், அமெரிக்க குடிமகன்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கவும், வெளிநாட்டவர்கள், அமெரிக்காவில் குடியேறுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கும் உத்தரவில் நான் கையெழுத்திடுவேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் அதிக அளவில் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய H-1B விசாக்கள் குடியேற்ற விசாக்கள் அல்ல என்பதால் டிரம்பின் அறிவிப்பு குறித்து குழப்பம் நிலவுகிறது. கொரோனாவால் சுமார் இரண்டேகால் கோடி அமெரிக்கர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் மாதத்தில் உலகெங்கிலும் உள்ள அனைத்து வழக்கமான விசா சேவைகளையும் அமெரிக்கா நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
In light of the attack from the Invisible Enemy, as well as the need to protect the jobs of our GREAT American Citizens, I will be signing an Executive Order to temporarily suspend immigration into the United States!
— Donald J. Trump (@realDonaldTrump) April 21, 2020