அதாவது வெளி உலகிற்கு ராஜா சார் இசையமைப்பாளர் ஆகி 44 ஆண்டுகள் ஆகி இருக்கு …!
ராஜா சார் ஏன் ஸ்பெஷல் …?
ஏதோ ஒரு குக்கிராமத்தில் இருந்து வந்து தன்ராஜ் மாஸ்டர் கிட்ட வந்து சேர்ந்து அவர் கிட்ட கிடார் வாசிக்க கத்துகிறார் . அப்ப அவருக்கு தெரிது கர்னடாக சங்கீதம் கத்துகிட்டா இன்னும் சுலபமா இசையில் பெரிய ஆளாக வர்லாம் என்று விடியற்காலை நாலு மணியில் இருந்து கர்னடாக சங்கீதம் கத்துகிட்டு , அஞ்சறை மணியில் இருந்து சம்ஸ்க்ருதம் வகுப்புக்கு போய்கிட்டே தன்ராஜ் மாஸ்டரிடமும் வாசிக்க போவாராம் (வாலிப வாலியில் வாலி சொன்னது ) அந்த மனுசனின் உழைப்புலாம் நினைச்சாலே புல்லரிக்கும் .
அன்னக்கிளி பாடல் பதிவு அப்ப கரண்ட் கட்டாம் இப்ப அதுலாம் வேடிக்கையா இருக்கலாம் ஆனா அந்த காலகட்டத்தில் சினிமா உலகமே சென்டிமென்டுகளால் ஆன உலகம் இந்த மனுசன் ஜெயிக்க மாட்டானுதான் பல பேர் நினைச்சி இருப்பாங்க ஆனா மனுசன் 44 வருசம் கழிச்சு இன்னிக்கும் பீல்ட்ல கெத்தா இருக்கார்.
ராஜா சார் எனக்குள்ள வர ஆரம்பிச்சது ஜனனி ஜனனி ஜகம் நீ பாட்டு மூலம்தான் அது அவரோட இசையினுலாம் தெரியாது ஆனா அந்த பாட்டு தினமும் காலையில் எதனா ஒரு இடத்துல கேப்பேன்.நான் கேக்கறஅப்பவே அந்த பாட்டு 16 வருசம் பழைய பாட்டு…!
அதுக்கு அப்பறம் கமல் ரசிகனா மாறின காலத்தில் கேக்கும் பல கமல் பாட்டு எல்லாமே ராஜா சாரின் இசைதான் . கமல் ராஜா சார் காம்போ பாட்டு எல்லாமே வேற லெவல் ..!
வளர்ந்த அப்பறம் ராஜா இசையின் மகிமை தெரிய ஆரம்பிச்சது அவரை பத்தி கேள்விபட்றது எல்லாமே ராஜாவை மனிதன் என்ற கண்ணோட்டத்தை தாண்டி ஒரு ஞானியாகதான் பார்க்க ஆரம்பிச்சேன் …!
அசந்த போன ராஜாவை பற்றிய சில விசயங்கள் ;
ராஜா ஒரு வருடத்தில் 56 படங்களுக்கு இசையமைத்துள்ளார் . ஒரு வருடத்திற்கு 52 வாரம் வாரம் ஒரு படம் என்று கணக்கு எடுத்து கொண்டாலும் இது யாரும் கனவில் கூட நினைக்க முடியாத பெரிய சாதனை ….!
படப்பூஜையில் இசை ராஜானு வந்ததால் போதும் படத்தின் வியாபாரம் அன்றே முடிந்துவிடும் …!
தினமும் பிரசாத் ஸ்டுடியோவில் ஏழு மணிக்கு ராஜா கார் உள்ளே நுழையும் அதை பார்க்கவே டைரக்டர் கூட்டம் , ரசிகர்கள் கூட்டம் பிரசாத் ஸ்டுடியோ வாசலில் நிற்கும் …!
ராஜா சார் – கமல் காம்பினேசனே இதுவரை நூறு படம் வந்து இருக்கு இந்த சாதனையை வேற யாரும் பண்ண முடியாது …!
ராஜா சார் டியூன் போட்ற வேகத்துக்கு உலகில் எந்த இசையமைப்பாளரும் போட முடியாது . ஒரு சிச்சுவேசனுக்கு குறைந்ததது பத்து டியூனாச்சும் வரும் . லேட்டஸ்ட்டா உன்னை நினைச்சு (சைக்கோ) பாட்டுக்கு 31 டியூன் போட்டு கொடுத்தாராம் அதில் மிஷ்கினுக்கு பிடிச்ச டியூன்தான் திரையில் நாம் பார்த்தது …!
சின்ன படம் , பெரிய படம் பார்த்து இசையமைத்தது இல்லை ராமராஜன் முதல் ரஜினிகாந்த் வரை எல்லாரும் சமம்தான் என்று சமீபத்திய இளையராஜா 75ல் அவர் கூறி இருந்தார் .
நிறைய புது இயக்குனர்களின் படத்திற்கு குறைந்த சம்பளம் , சில சமயங்களில் சம்பளம் எதுவும் வாங்காமலே கதை நன்றாக உள்ளது என்று இசையமைத்து இருக்கிறார் .
படத்தில் எதனா குறைவா தெரிஞ்சா அதை சொல்லி சீனும் அதுக்கு அவரே சீனும் சொன்ன படம் ஏராளம் அதுலாம் வெற்றியும் பெற்று இருக்கு .
ராஜா ஆறு டியூன் போட்டு வைச்சிட்டு இருந்து அதை ஒரு படத்துலயே யார் பயன்படுத்துகிறார்களோ அவங்களுக்கு தான் அது தருவேன் சொல்லி அந்ந டியூன்களுக்காக எழுதிய கதைதான் வைதேகி காத்திருந்தாள் .
ராஜா சார் ஸ்டுடியோவில் எப்பவும் டைரக்டர்ஸ் இருந்துட்டே இருப்பாங்க சில சமயம் ராஜா சாரை பார்க்க கூட கடினமா இருக்கும் , பாடல் வாங்க சென்ற உதயக்குமார் நேரம் கருதி மற்ற இயக்குனர்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய ஐந்து டியூன்களை எனக்கு வேண்டும் என்று கூறி எடுத்து வந்ததுதான் எஜமான் படத்தில் நாம் கேட்ட பாடல்கள்.
ஹேராம் படத்திற்கு வேறு ஒரு இசையமைப்பாளரை கொண்டு படம் மொத்தமும் முடித்த பின் அந்த இசையமைப்பாளருக்கும் , கமலுக்கும் பிரச்சினை ஏற்படவே அவர் விலக , ஏற்கனவே அனைத்தும் எடுத்து முடித்த படத்திற்கு தன் இசையால் வேறு ஒரு பரிணாமத்தை தந்தவர் ராஜா .
ஹேராம் பின்னணி இசைக்கோர்ப்பின்போது ராஜா சார் தந்த இசைக்குறிப்பபை கண்டு லண்டன் இசைக்கலைஞர்கள் பிரமித்து போனதை தன் வாழ்வின் பெரிய மொமண்ட் என்று கமல்ஹாசன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
சிம்பொனி இசையை இந்திய இசைக்கு கொண்டு வந்தவர்.
உலக அளவில் பிரபலமான பாட்டில் இவரின் ராக்கம்மா கையைதட்டு பாடல் தேர்வு செய்யப்பட்டது .
பஞ்சமுகி என்ற ராகத்தை உருவாக்கியவர் இசைஞானி .
இதையெல்லாம் தாண்டி ராஜா பல பேர் வாழ்வில் தினமும் நாளை கடத்த உதவி கொண்டிருக்கிறார்.
எனக்கு பிடித்த ராஜா – இயக்குனர் காம்போ ;
மணிரத்தினம் – ராஜா
பாரதிராஜா – ராஜா
மகேந்திரன் – ராஜா
பாலுமகேந்திரா – ராஜா
விஸ்வநாத் – ராஜா
கேபி – ராஜா
பாலா -ராஜா
மிஷ்கின் -ராஜா
பாடல்களை தாண்டி பின்னணி இசை என்று வந்தால் இந்திய அளவில் இந்த மாதிரி ஒரு இசையமைப்பாளரே இல்லை
ராஜா பின்னணி இசை அமைக்கும்போது முதல் ரீலில் இருந்து கடைசி ரீல் வரை ஒரு முறை பார்ப்பாராம் அதன் பிறகு அவர் பாட்டுக்கு இசைக்குறிப்புகளை எழுத ஆரம்பித்திடுவாராம் . இன்று நாம் வியந்து பார்க்கும் பல இசைக்கோர்ப்புகள் நொடி பொழுதில் ராஜாவின் கைகளில் இருந்து வந்தவை ….!
ராஜாவின் பின்னணி இசையில் எனக்கு பிடித்த முதல் பத்து படங்கள் ;
1.மௌன ராகம்
2 .வீடு
3.ஜானி
4.நான் கடவுள்
5.தேவர் மகன்
6.ஹேராம்
7.நாயகன்
8.முள்ளும் மலரும்
9.ஆறிலிருந்து அறுபது வரை
10.ஆண்பாவம்
தற்போதுள்ள இயக்குனர்கள் ராஜாவிடம் செல்ல ஒரு வித தயக்கமும் ,பயமும் கொண்டு அணுக மாட்றாங்க ஆனா கௌதமும் சரி ,மிஷ்கினும் சரி ,பால்கியும் சரி இப்பவரைக்கும் சரியாதான் அவர் கிட்ட இசையை பெற்று கொண்டிருக்கிறார்கள் …!
ராஜாவிற்கு இசை வாய்ப்பு வந்துதான் அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் என் போன்ற ராஜாவின் பக்தர்களுக்கு அவரின் இசை வேண்டும்…!
இந்த தலைமுறை ராஜா சாரை வெறும் கோபக்கார ஆசாமியாக வேணா பார்க்கலாம் ஆனா இன்றும் பல இயக்குனர்களுக்கு , தயாரிப்பாளர்களுக்கு ,நடிகர்களுக்கு , ரசிகர்களுக்கு அவர் சாமி தான் .….!
ஆம்
” புது ராகம் அமைப்பதாலே அவரும் இறைவனே “