தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாளுக்கான பொது வார்டு கட்டணம் 5 ஆயிரம் ரூபாய் என்றும், ஐசியுவில் ஒரு நாள் சிகிச்சை பெற 10 ஆயிரம் ரூபாய் என்றும் தமிழக அரசால் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், கொரோனா நோய் தொற்றுக்கு அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமைனைகளுக்கு வழங்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்து, சுகாதாரத்துறை செயலாளர் தலைமையிலான குழு அளித்த அறிக்கைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா சிகிச்சைக்கான அனைத்து சேவைகளுக்குமான தொகுப்பு கட்டணம் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுவார்டில் அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கான கட்டணம் 9 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த படுக்கை எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 25 விழுக்காட்டை இத்திட்டத்தின் கீழ் வரும் நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகள், மருத்துவமனைகளுக்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவையில்லை.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்தக் கோரும் மருத்துவமனைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்
இந்த அறிவிப்பு ஏற்கனவே முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெற தகுதியான குடும்பங்களுக்கு பொருந்தும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Jofra Archer talks about unfair criticism and racist replies during lockdown