சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சூரரைப் போற்று’. கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளில் இல்லாமல் அமேசான் ஓடிடியில் இப்படம் வெளியானது.
தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி பலரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
சூரரைப் போற்று படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவைப் பாராட்டிக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் இயக்குநர் வஸந்த்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:
”அன்புள்ள சூர்யாவுக்கு,
இந்தப் பாராட்டுக் கடிதம் உனக்கு இல்லை, நெடுமாறன் ராஜாங்கத்திற்கு. முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை உன் ஆட்சிதான். காட்சிக்கு காட்சிக்கு உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறாய்!
தமிழ்த் திரையுலகில் என் மூலம் நிகழ்ந்த உன் அறிமுகத்திற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீயாகவே முயன்று கற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக உன் நடிப்பை இதுவரை பல படங்களில் வெளிப்படுத்தியிருந்தாலும் இதுதான் உன் உச்சம்’ இப்போதைக்கு!! நெடுமாறன் ராஜாங்கமாக நீ நடிக்கவே இல்லை, ரத்தமும் சதையுமாக உணர்ந்து வாழ்ந்திருக்கிறாய்.
முதல் காட்சியின் ஆரம்பம் கூட பரவாயில்லை. இறுதியில் நீ வென்ற பிறகு கூட உன் முகத்தில் சிரிப்பு இல்லை. அந்தத் தீவிரத் தன்மை, அதைச் சாதிக்க வேண்டும் என்ற வெறி உன் கண்களில் இறுதிவரை தெரிகிறது. கனல் மணக்கும் பூக்களாக… ஒவ்வொரு காட்சியிலும் நெடுமாறன் தோற்கும்போது ஒவ்வொரு காட்சியிலும் ஜெயிக்கிறது உன் நடிப்பு. எவ்வளவு இயல்பாக அதுவும் இவ்வளவு இயல்பாக, எதார்த்தமாக துளி மிகையில்லாமல் ஒரு கதாபாத்திரத்துக்கு மிகச் சிறப்பாக உயிரூட்டியிருக்கிறாய்.
உன் வெற்றியின் பெருமிதத்தில் நான் தொப்பியை மாட்டிக்கொண்டு சொல்கிறேன் “HATS OFF TO YOU MY DEAR SURIYA”. என்னை விட யாருக்கு மகிழ்ச்சி இருந்துவிட முடியும். ஏனென்றால் என் விதை நீ, என் விருட்சம் நீ. எனக்கு எத்தனை பெருமிதம் என்று எழுதி முடியாது. உச்சி முகர்ந்து மகிழ்கிறேன்”.
இவ்வாறு வஸந்த் குறிப்பிட்டுள்ளார்.
1997ஆம் ஆண்டு தனது ‘நேருக்கு நேர்’ படத்தில் சூர்யாவை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் வஸந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
