தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி அதிக நேரம் கடைதிறந்து வைத்திருந்ததாக ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.
காவல்துறையினர் கடுமையாக தாக்கியதன் காரணமாகவே இருவரும் உயிரிழந்தனர் என்று உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டிவந்தனர். சாத்தான்குளம் சம்பவத்துக்கு தேசிய அளவிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நேரில் சென்று விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் பாரதிதாசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு சமர்பித்திருக்கும் அறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் இடம் பெற்றுள்ளன. அதில், ‘சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய நேரடி சாட்சியான தலைமைக்காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தியதில், ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை காவலர்கள் விடிய விடிய கடுமையாக தாக்கியதையும், இதனால் காவல்நிலைய மேஜை மற்றும் லத்தியில் ரத்தக்கறை ஏற்பட்டதையும் தெரிவித்தார்.
இந்நிலையில் சாட்சியம் அளித்த காவலர் ரேவதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ட்விட்டரில் கடந்த இரண்டு வருடங்களாக எந்த கருத்தும் பதிவிடாமல் இருந்த இயக்குநர் வெற்றிமாறன், நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி, மாஜிஸ்திரேட் பாரதிதாசன், தலைமை காவலர் ரேவதி ஆகிய நீங்கள் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறீர்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’ என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் ஜி.வி.பிரகாஷ், நடிகை ராஷி கண்ணா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வாக்குமூலம் அளித்த காவலர் ரேவதியை பாராட்டி வருகின்றனர்.