Penbugs
Editorial/ thoughtsInspiring

“சதையை மீறும் மூன்றாம் பாலினம்”

மயக்கம் என்ன படத்துல செல்வராகவன்
ஒரு அழகான வசனம் எழுதியிருப்பாரு,

கிரியேட்டிவிட்டி சார் கிரியேட்டிவிட்டி
கடவுள் கொடுக்கணும், – ன்னு

அது மாதிரி தான் பரதநாட்டியம்
ஆடுறவங்க ஒவ்வொரு அசைவுலையும்
அபிநயம் பிடிப்பாங்க அது ஒரு கலை – ல
சேரும், அந்த கலை எல்லாருக்கும்
ஈஸியா வந்துறாது,ஒவ்வொரு
அசைவுலையும் அபிநயம் பிடிச்சு
ஒரு நாள் ஆயிரம் பேர் மத்தியில
அரங்கேற்றம் பண்ணுனா தான் அவங்க
கலைக்கு பெருமை, ஆனா அவங்களோட
அபிநயம் பிடிக்குற உடல் மொழி
அவங்களோட எல்லா செயல்களிலும்
அட்டை பூச்சி போல அவங்க கூடயே
ஒட்டிக்கிரும்,அவர்கள் தில்லை அம்பல
நடராஜன் வழியில் வந்த ஒரு ஈசனின்
சீடர்கள் போன்றவர்கள் அதே
போலத்தான்,

நம்ம கூட ஒருத்தன் படிப்பான்
பிறப்பாலோ அல்லது மரபு வழில
ஏற்படுற மாற்றத்தாலையோ
அவனோட உடல் மொழியில சில
மாற்றங்கள் ஏற்படும், ஆனா அவனோட
விஷயத்துல அவன் தெளிவா இருப்பான்
தனக்கு எது தேவைன்னு அவனுக்கு
தெரியும், நிறைய கேலியும் கிண்டலும்
தினம் தினம் பார்த்து ஒரு நாள்
வாழ்க்கை வெறுப்பாக அவனுக்கு மாறும்,

*

இங்க பாருடா “9” வந்துட்டான்
டேய் அவன் அலி டா
மச்சான் அவன் பொட்ட டா

*

இங்க நம்ம எத்தனை பேருக்கு
ஒரு செயல்ல துணிந்து முடிவெடுக்க
தைரியம் இருக்கு, பத்து பேர்கிட்ட
அறிவுரை கேப்போம்,யோசிப்போம்,
ஊருல பல பேரு பல விதமான
அறிவுரை சொல்லுவான் நமக்கு,
ஆனா கடைசியா ஒரு தெளிவான
முடிவ நம்ம எடுக்க கடைசி வர
குழப்பத்தோடயே தான் எடுப்போம்,

ஆனா ஊரே கிண்டல் செய்த அந்த
ஒருத்தன் தன்னோட உடல் மொழியில
ஏற்படுற காலப்போக்கின் மாற்றத்தை
உணர்ந்து தனது நடவடிக்கைகளை
உணர்ந்து யாரிடமும் சொல்லாமல்
மன வலிமையுடன் துணிந்து ஒரு நாள்
திருநங்கையாக மாறுகிறான்,

அவன் திருநங்கையாக மாறி வீட்டுக்கு
வரும் போது அவன் பெற்றோரில்
இருந்து காரியத்திற்கு மட்டும் கை
கோர்க்கும் சொந்தக்கார்கள் வரை
அவனை தகாத வார்த்தையில் பேசி
வீட்டை விட்டு வெளியே
அனுப்பப்படுகிறான்,

பேண்ட் சட்டையில் இருந்து சுடிதார்
சேலைக்கு மாறுகிறான், வீடின்றி
திருநங்கைகள் உடன் தெருக்களில்
கொசுக்கடியுடன் தன் இரவினை
கழிக்கிறான்,

குடிமகன்கள் விலைமாதுவாக
அவனை மாற்றுகிறார்கள் கேவலம்
ஐந்து நிமிட சுகத்துக்கு,

பஞ்சம்,பட்டினி,இயலாமை என
அனைத்தும் ஒருவனின் மேல்
மொத்தமாக குடிபெயர்ந்து கொள்கிறது,

இந்த சமூகம் அவனை
“Prostitute” – ஆக மாற்றி
நான்கு சுவர்களுக்குள் தள்ளுகிறது,

தன் வலிகளை மறைத்துக்கொண்டு
எத்தனை குடிமகன்களின் போதைக்கு
இவன் ஊறுகாயாக தொட்டு சாப்பிட
அனுமதி கொடுத்திருப்பான்(ள்)(விலைமாதுவுக்கும் இது பொருந்தும்),

பேருந்திலோ ரயிலிலோ அவன் கை
தட்டும் சத்தம் கேட்டாலே தெறித்து ஓடும்
சிலரின் மத்தியில் தங்களால் முடிந்த
ஐந்து அல்லது பத்து ருபாய் கொடுத்து
இவனின் ஆசிர்வாதத்தை பெறும் சில
மனிதநேயமுள்ள ஜீவன்களும் இங்கு
உள்ளன,

விழுப்புரம் மாவட்டம் கூவாகம் ஊரில்
கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது,
ஊரே தீட்டு என நினைக்கும்
திருநங்கைகள் அன்று ஒரு தேவதை
வடிவிலும் கடவுள் வடிவிலும் ஊர்
போற்றி கொண்டாடப்படுவர் அந்த
திருவிழாவில்,

எத்தனை பேருக்கு தெரியும்
இந்த திருநங்கைகளுக்கும்
மஹாபாரதத்திற்கும்
ஒரு ஒற்றுமை இருக்கிறது என்று,

மகாபாரதப் பெருங்காவியங்களில்
அர்ச்சுனனால் கவரப்பட்டு
கர்ப்பமாக்கப்பட்ட வேடுவப் பெண்ணான
நாகக்கன்னியின் மகன் அரவான்,
குருஷேத்திர யுத்தத்தில் பாண்டவர்
பக்கம் வெற்றி கிடைக்க “எந்த குற்றமும்
இல்லாத சகல லட்சணமும் பொருந்திய
ஒரு மனிதப்பலி தங்கள் தரப்பில்
முதல் பலியாக வேண்டும்” என ஆருடம்
கூறுகிறது. பாண்டவர் தரப்பில் இவ்வாறு
சாமுத்திரிகா லட்சணம்
பொருந்தியவர்களாக இருப்பவர்கள்
அர்ஜுனன், அவன் மகன் அரவான்,
ஸ்ரீகிருஷ்ணர்,

அர்ஜீனனும், கிருஷ்ணரும் தான் இந்த
போருக்கு முக்கியமானவர்கள் என்பதால்
அரவானைப் பலியாக்க முடிவு செய்து
இருவரும் அவனை அணுகுகின்றனர்.
அரவான் பலிக்கு சம்மதித்தாலும்,
அவனுக்கான இறுதி ஆசையாக ஒரு
பெண்ணுடன் ஒரு நாள் இல்லற
வாழ்வை முடித்த பின்பே தான்
பலிக்களம் புகுவேன் என சொல்கிறான்.
வேந்தர் குலம் முதல் வேடுவர் குலம்
வரை எந்தப் பெண்ணும் இதை ஏற்க
முன்வரவில்லை. இறுதியாக
ஸ்ரீகிருஷ்ணரே மோகினி
அவதாரமெடுத்து அரவானை
மணக்கிறார். ஒரு நாள் இல்லற
வாழ்விற்குப் பின் பலிக்களம்
புகுகிறான் அரவான்,
விதவைக் கோலம் பூணுகிறாள்
மோகினி, இந்த கதையின்
அடிப்படையில் மோகினியாய் தம்மை
உணரும் அரவாணிகள் கூடி வரும்
நிகழ்வாகக் கூவாகம் கூத்தாண்டவர்
திருவிழா உள்ளது,

சித்திரை பௌர்ணமியன்று
கூத்தாண்டவராகிய அரவானைக்
கணவனாக நினைத்துக் கொண்டு
கோயில் அர்ச்சகர் கையால்
திருநங்கைகள் அனைவரும் தாலி
கட்டிக் கொள்கின்றனர். இரவு முழுவதும்
தங்களது கணவனான அரவானை
வாழ்த்திப் பொங்கல் வைத்து
கும்மியடித்து ஆட்டமும் பாட்டமுமாக
மகிழ்ச்சியாயிருக்கின்றனர். பொழுது
விடிந்ததும் அரவானின் இரவு
களியாட்டம் முடிவடைகிறது. நன்கு
அலங்கரிக்கப்பட்ட தேரில் மரத்தால்
ஆன அரவான் சிற்பம் வைக்கப்பட்டு,
கூத்தாண்டவர் கோயிலிலிருந்து நான்கு
கி.மீ தூரத்தில் உள்ள கொலைக்
களமான அமுதகளம் கொண்டு
செல்லப்படுகிறான். வடக்கே உயிர்
விடப்போகும் அரவானைப் பார்த்து
திருநங்கைகள் ஒப்பாரி வைக்கின்றனர்,
அமுதகளத்தில் அரவான் தலை இறக்கப்
படுகின்றது. திருநங்கைகள் அனைவரும்
முதல்நாள் தாங்கள் கட்டிக்கொண்ட தாலி
அறுத்து, பூ எடுத்து, வளையல் உடைத்து
பின் வெள்ளைப் புடவை உடுத்தி விதவை
கோலம் பூணுகின்றனர்,

இப்படி கடவுளுக்கு நிகராக
திருநங்கைகள்
மதிக்கப்படவேண்டியவர்கள் அவர்களை
கொண்டாட வேண்டாம் அவர்களில்
ஒருவர் படித்து நல்ல நிலைக்கு வந்தால்
அவர்களை இகழ வேண்டாம், அவர்கள்
கடந்து வரும் பாதை நம்மை போன்றது
அல்ல ராட்சச கூட்டங்கள் நிறைந்த ஒரு
வழிப்பாதை அது,

இங்கு கிருஷ்ணனின் மோகினி
அவதாரம் திருநங்கை என
சொல்லப்படும் கதைகளும் உண்டு
அதே நேரத்தில் அர்த்தநாரீஸ்வரராக
மாறிய ஈசனின் கதையும் உண்டு,

ஏப்ரல் – 15,
இன்று திருநங்கைகளுக்கான தினம்

அவங்களோட ஒவ்வொரு கை தட்டலும்
இந்த சமுதாயத்து மேல சட்டைய பிடிச்சு
அவங்க தட்டி கேக்குற உரிமைக்கான
சவுக்கடி,

ஒருத்தங்கள வளர விடாட்டியும்
அவங்கள தாழ்த்தி வைக்காதிங்க
அவங்க அவங்களாவே
சீக்கிரமா முன்னேறி வந்துருவாங்க..!!

புகைப்படம் உதவி :
Maddhan Photography

எழுத்தும் சிந்தனையும் :
Shiva Chelliah & Vasanth S

Blog link:

http://shivachelliah.blogspot.com/2020/04/blog-post_15.html

: ) “