சின்னத்திரையினர் நாளை முதல் படப்பிடிப்புகளை நடத்தலாம் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்து, சுற்றுச்சுவர் உள்ள வீடுகள் அல்லது அரங்கிற்குள் மட்டும் படப்பிடிப்பு நடத்தவேண்டும், பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது, ஊரகப் பகுதிகளில் மட்டும் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த தடை இல்லை, பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.
படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர்கள், நடிகைகள் தவிர மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும், சமூகஇடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும்.
நடிகர், நடிகைகளும் படப்பிடிப்பின் இடைவெளியின்பொழுது தவறாமல் முகக்கவசம் அணியவேண்டும், அதிகபட்சமாக நடிகர், நடிகை தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட 20 பேருக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்தலாம், படப்பிடிப்பு அரங்கம், கருவிகள், வாகனங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும், சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிறமாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமும் முன்அனுமதி பெறவேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிபந்தனைகளை தவறாமல் கடைபிடிப்பதை, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் உறுதிசெய்துகொண்டு,நாளை முதல் படப்பிடிப்பு நடத்திட அனுமதி வழங்கப்படுகிறது.