Editorial News

அம்மா நகரும் நியாய விலைகடைகள் திட்டம் துவக்கம்

அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களைக் குடும்ப அட்டைதாரர்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே கொண்டு சென்று விநியோகிக்கும் வகையில் 9 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளின் சேவையினைத் தொடங்கி வைக்கும் அடையாளமாக 7 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளின் வாகனங்களை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

மேலும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ், முன்னோட்ட அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த அரிசி வழங்கும் திட்டத்தினைத் தொடங்கி வைக்கும் அடையாளமாக ஆறு குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசிப் பைகளை வழங்கினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 24.2.2014 அன்று சென்னையில் நகரும் நியாயவிலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

மக்கள் எளிதில் அணுக இயலாத பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தற்போது 48 நகரும் நியாயவிலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் 277 கிராமங்கள் மற்றும் சென்னையில் 54 தெருக்களில் வசிக்கும் 27 ஆயிரத்து 420 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும், திருப்பூர், திருச்சி, கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, நாமக்கல், சேலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மலைக் கிராமங்கள் பயன் பெறுகின்றன.

இந்தத் திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தும் வகையில், தமிழ்நாடு முதல்வர் 20.3.2020 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், ‘பல்வேறு தரப்பிலிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கும் பொருட்டு 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் ரூபாய் 9.66 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்’ என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்புக்கிணங்க, தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சத்து 37 ஆயிரத்து 315 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், அவர்களது குடியிருப்புகளுக்கு அருகிலேயே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிட 9 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளின் சேவையினை தொடங்கி வைக்கும் அடையாளமாக 7 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளின் வாகனங்களை தமிழ்நாடு முதல்வர் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்த நடமாடும் நியாயவிலைக் கடைகள் மூலம், மாதம் ஒருமுறை குடும்ப அட்டைதாரர்களுக்கு வசதியான, அரசால் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில், தாய் கடையின் விற்பனையாளர் நேரில் சென்று அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்வார்.

மேலும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ், முன்னோட்ட அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த அரிசி வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக தமிழ்நாடு முதல்வர் இன்று ஆறு குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசிப் பைகளை வழங்கினார்.

செறிவூட்டப்பட்ட அரிசியானது இரும்பு, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி-12 போன்ற நுண்ணூட்டச் சத்துகளைக் கொண்ட ஊட்டச்சத்து மிகுந்த அரிசியாகும். இது பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் உட்பட அனைவருக்கும் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், ரத்த சோகையைப் போக்கிடவும் உதவுகிறது.

இத்திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஊட்டச்சத்து மிகுந்த செறிவூட்டப்பட்ட அரிசியானது பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 ஆயிரத்து 500 மெட்ரிக் டன்னும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மற்றும் சத்துணவுத் திட்டத்தின் மூலம் 500 மெட்ரிக் டன்னும் 1.10.2020 முதல் வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் மூன்றாண்டு காலங்களுக்குச் செயல்படுத்தப்பட உள்ளது”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related posts

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்தை திறந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி

Penbugs

As lockdown eased, huge crowd seen playing cricket at T Nagar’s Somasundaram Ground

Penbugs

சட்டபேரவை தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Kesavan Madumathy

மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

Penbugs

Dr BR Ambedkar statue design unveiled

Penbugs

August 23, 2014: Charlotte Edwards scored 108*

Penbugs

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Penbugs

சென்னையில் இன்று (17-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை

Penbugs

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள்

Penbugs

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

Kesavan Madumathy

டி.எஸ்.பியாக பொறுப்பேற்ற தன் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் ஆய்வாளர் தந்தை!

Penbugs

Leave a Comment