தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மூச்சு திணறல் காரணமாக கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி முண்டியபாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக 90 விழுக்காடு நுரையீரல் பாதிக்கப்பட்டதால், உடல்நிலை தொடர்ந்து கவலைகிடமாக இருப்பதாகவும், நிமோனியா பாதிப்பில் உள்ள அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11:15 மணி அளவில் துரைகண்ணு உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அமைச்சரின் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் இரங்கல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் துரைக்கண்ணுவின் இழப்பு தனக்கு வேதனையும், அதிர்ச்சியும் அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும் அமைச்சர் துரைக்கண்ணுவின் இழப்பு அதிமுகவிற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பு என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் துரைக்கண்ணு உடல் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான ராஜகிரியில் இன்று முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.