நடிப்பதைவிட்டுவிட்டு செவிலியர் வேலைக்குத் திரும்பிய பாலிவுட் நடிகை ஷிகாவிற்கு இன்ஸ்டா பக்கத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கொரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க மத்திய அரசு, வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் நோய்த்தொற்றின் தீவிரம் குறைந்துள்ளதாகக் கணிக்கப்பட்டாலும் அதன் தாக்கம் இன்னும் சில காலம் வரை இருக்கவே செய்யும் என மருத்துவர்கள் கூறிவருகிறார்கள். இதனிடையே கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர் ஒருவர் சென்னையில் இறந்துள்ளார். இவரை அடக்கம் செய்வதற்காக இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, அவரை அடக்கம் செய்ய மறுத்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தக் கொடுமையை நினைத்து பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை கொரோனா நோய்த் தொற்றுக்குப் பயந்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மாட்டோம் எனக் களத்தில் இறங்கினால் நாட்டின் நிலை என்னாவது எனப் பலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே வட இந்தியாவில் மனதை ஈர்க்கும் ஒரு செயலை செய்துள்ளார் பாலிவுட் நடிகை ஷிகா. டெல்லியிலுள்ள வர்தமன் மஹாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனையில் நர்சிங் பட்டம் பெற்றவர் பாலிவுட் நடிகர் ஷிகா மல்ஹோத்ரா. இவர் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள முன்வந்துள்ளார். இதுவரை நடிகையாக இருந்த இவர், கொரோனா நோயாளிகளுக்கு உதவ மும்பை மருத்துவமனையில் ஒரு செவிலியராக சேர்ந்து தன்னார்வலராகத் தொண்டு செய்யத் தொடங்கியுள்ளார்.
இந்தச் செய்தியைத் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட ஷிகா, மார்ச் 27 தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் மூன்று நிமிட நீள வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில், நர்சிங் பணிக்குத் திரும்பிச் செல்ல தன்னைத் தூண்டியது என்ன என்று ஷிகா விளக்கியுள்ளார். மேலும் அதில் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு வாரமாகத் தன்னார்வலராகத் தொண்டு செய்ய முயற்சி மேற்கொண்டிருப்பதாக ஷிகா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஷிகா சொன்னதைப் போல செவிலியையாக தன் பணியை மேற்கொண்டுள்ளார். அவர் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் செவிலியைப் பணியைச் செய்துவருவதையும் அவர் முகக்கவசம் அணிந்து செவிலியை உடையில் உள்ளதையும் ஷிகா, இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். ஒரு நடிகையாகத் தனது தொழிலைப் பார்க்காமல் படித்த படிப்புக்கு ஏற்ப சேவை செய்ய மருத்துவத் துறைக்குத் திரும்பியுள்ள அவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.