கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகளை, பொது மக்களுக்கு தகுந்த மருந்துவரின் பரிந்துரையின்றி விற்பனை செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.
சமூக ஊடகங்களில் கொரோனா வைரஸ் குறித்தும், சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகளின் இருப்பு, பயன்படுத்தும் முறை பற்றி பல தவறான தகவல்கள் பரப்பபட்டு வருகின்றன. மக்களும் பல்வேறு நகரங்களில் தாங்களாகவே ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை உட்கொண்டு பாதிப்புக்கு ஆளானதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் டுவிட்டரில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து பரிந்துரைப்படி வழங்கப்பட வேண்டிய மருந்து, இதனை மருத்துவர் பரிந்துரையின்றி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர். இம்மருந்து எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்ட பிற நோயாளிகள், கொரோனா பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த வீட்டு உறுப்பினர்களுக்காக போதுமான அளவு ஹைட்ராக்சி குளோரோகுயின் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இம்மருந்து அவர்களுக்கானது மட்டும் தான். பிற பொது மக்களுக்கு தேவையில்லை. மருத்துவர் பரிந்துரையின்றி சுயமாக இம்மருந்தை எடுத்துக்கொண்டால் மோசமான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என எச்சரித்துள்ளது.