பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக இன்று அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
நாளை மாலை 6 மணிக்கு இயக்குனர் பாரதிராஜா எஸ்பிபி-காக ஒரு கூட்டு பிரார்த்தனை நடத்த அழைப்பு விடுத்திருக்கிறார்.
அதில் பங்கேற்க ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல நடிகர்களை அவர் அழைப்பு விடுத்து உள்ளார்.
இந்நிலையில் நடிகர் சிம்பு எஸ்பிபி பற்றி உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
மேலும் கூட்டு பிரார்த்தனையில் கலந்துகொள்ள ரசிகர்களையும் அவர் அழைத்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது ,
உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், பாடல் கேட்டு வாழும் என் போன்ற அனைத்து மக்களுக்கும் வணக்கங்கள். எத்தனையோ பேரை உயிர்த்த குரல் அது. எத்தனையோ நாட்களைக் கடந்தூவரச் செய்த வரப் பாடல்கள் அவருடையது.
இனிமை என்ற வார்த்தையை உணர்வுப் பூர்வமாக உணர அவர் பாடக் கேட்டாலே போதும். அற்புதங்களை தமிழ் சினிமாவில் நிகழ்த்திய பாடல் ஆசான் அவர்.
இன்று மருத்துவமனையிலிருந்தூ மீண்டு வரும் வரத்திற்காய் காத்திருக்கிறார். நம் வேண்டுதல் என்னும் ஒருமித்த எண்ணம் அவரிடம் அற்புதங்கள் நிகழ்த்தி நம்மிடையே மீண்டும் அழைத்து வர வேண்டும். எஸ் பி பி என்பது ஒரு பெயரல்ல. அது காற்றை இன்னிசை ஆக்கிய மருந்து. அவரின் மீண்டு வருவது நமக்கு மிக முக்கியம்.
லெஜண்டுகளை நம்மோடு பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது அவசியம். அவர்கள் பாடிக்கொண்டு, நம்மிடையே இருப்பதை கடவுளிடம் கெஞ்சிக் கேட்டு மீட்டு வரவேண்டும். நம் ‘பாடும் நிலா’ எழுந்து வரவேண்டி நம் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் முன்னெடுப்பின்படி, நாளை 20-ம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நாம் அனைவரும் எஸ் பி பி அவர்களின் பாடலை ஒலிக்கவிட்டு அவருக்காக வேண்டிக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.
வேண்டுதலின் பலனாய் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு உங்களில் ஒருவனாய்…
அன்புடன், சிலம்பரசன் TR.
இவ்வாறு அந்த அறிக்கையில் சிம்பு கூறி உள்ளார்.