தமிழகத்தில் புதிதாக 526 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் உள்ளிட்டவை பற்றிய சமீபத்திய தகவலை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் புதிதாக 526 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 360 பேர் ஆண்கள், 166 பேர் பெண்கள். இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 4 பேர் கொரோனா தொற்றால் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரே நாளில் 219 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,824 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 12,999 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதிக்கப்பட்ட நபர்கள் 2,19,406. இன்றைய தேதியில் மொத்தம் 4,664 பேர் சிகிச்சையில் உள்ளனர்.