மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லத்தை, நினைவில்லமாக மாற்ற ஏதுவாக சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில் 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் 188 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையை தீபா, தீபக் தரப்புக்கு வழங்கிய உயர்நீதிமன்றம், அவர்களை முதல்நிலை சட்டபூர்வ வாரிசுதாரர்கள் என அறிவித்தது.
ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு முன், தீபா-தீபக் ஆகியோரின் கருத்துக்களை கேட்டு அவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கவும் அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.
வேதா நிலையத்தை கையகப்படுத்துவதற்கு வழங்கும் தொகையில், வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா செலுத்த வேண்டிய 36.9 கோடி ரூபாய் வரி பாக்கியை செலுத்தி விடுவதாக தமிழக அரசு கூறியிருந்தது. அந்த வகையில் தமிழக அரசு சார்பில் சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் 67.9 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் படி, 12 ஆயிரத்து 60 சதுர அடி பரப்பளவு கொண்ட வேதா நிலையத்தின் கட்டிட மதிப்பு 2.7 கோடி ரூபாய் எனவும், இழப்பீடு எல்லாம் சேர்த்து தீபா தீபக் தரப்புக்கு 29.3 கோடி ரூபாய் வழங்கவும் அரசு சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு அரசுடமை ஆக்கப்பட்டுள்ளது.