மத்திய அரசு நான்காம் கட்ட அன்லாக் தொடர்பான வழிகாட்டுதல்களின்படி, சில மாநிலங்கள் செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை 9 முதல் 12 வகுப்புகளுக்கு மட்டும் மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளன.
கடந்த மாத தொடக்கத்தில், உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் இறுதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் ஆன்லைன் கற்பித்தலை எளிதாக்குவதற்காக பள்ளிகள் 50% ஆசிரியர்களை அழைக்கலாம் எனவும் கூறியிருந்தது.
தவிர, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பாடம் தொடர்பான தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள பள்ளிகளுக்கு ‘தன்னார்வ அடிப்படையில்’ செல்லலாம் என கூறியிருந்தது.
இந்நிலையில் தற்போது செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை திறக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு.
ஒன்பதாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்கள், வரும் 21 ஆம் தேதி முதல் (செப்டம்பர் 21) தங்களது சுயவிருப்பத்தின் பெயரில் பள்ளிக்கு செல்லலாம்
பள்ளிக்கு செல்ல விரும்பும் மாணவர்கள் அதற்கான ஒப்புதலை தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் பெறுவது அவசியம்.
பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பாடங்களில் உள்ள சந்தேகங்களை தீர்க்கும் விதத்தில் ஆசிரியர்கள் ஆலோசனைகளை மட்டுமே அளிக்க வேண்டும். அதேசமயம் மாணவர்களுக்கான ஆன் -லைன் வகுப்புகளையும் தொடர வேண்டும்.
பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முகக்கவசம் அணிவதையும், பள்ளி வளாகத்தில் ஆறு அடி தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதையும் ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இதேபோன்று மாணவர்கள் அவ்வப்போது கைகளை கிருமிநாசினி கொண்டு கழுவுவதையும் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
பள்ளி வளாகத்துக்குள் கூட்டுப் பிரார்த்தனை, விளையாட்டு, கூட்டமாக ஒன்று கூடுதல் போன்றவற்றுக்கு அனுமதி கிடையாது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படாமல் இருக்க அவர்களுக்கு ஆவோசனை வழங்க பள்ளி நிர்வாகங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனபன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.



