9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 30 சதவீதத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை திருத்தியமைக்கவும், மாணவர்களின் பாடச்சுமையை குறைக்கவும் சிபிஎஸ்இக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கற்றலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, முக்கிய பாடங்களை வைத்துக் கொண்டு 30 சதவீதம் அளவுக்கு பாடதிட்டங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.