தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு 2,162 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு ஆக 2,323 அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று மேலும் 161 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 138 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு 906 ஆக அதிகரித்துள்ளது.
இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 48. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1,258. இன்று உயிரிழப்புகள் எதுவும் இல்லை. பலி எண்ணிக்கை 27 ஆக உள்ளது.
இதுவரை செய்யப்பட்ட 1,19,748 கரோனா தொற்று மாதிரிகள் பரிசோதனையில் இன்று மட்டும்9,787 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 1,10,718 நபர்களுக்கும் இன்று மட்டும் 9,643 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று மட்டும் புதிதாக 161 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 2,323 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்று பாதிக்கப்பட்ட 161 பேரில் ஆண்கள் 97 பேர், பெண்கள் 64 பேர். மொத்தமாக பாதிக்கப்பட்டோரில் ஆண்கள் 1,553 பேர், பெண்கள் 770 பேர்.
தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 31,375. மேலும், 40 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர். தமிழகத்தில் 34 அரசு ஆய்வகங்கள், 11 தனியார் ஆய்வகங்கள் என 45 ஆய்வகங்கள் உள்ளன.