வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோர் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள் அனைத்தும் வரும் 8-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது சர்வதேச விமானப் போக்குவரத்தை கடந்த மார்ச் 22-ம் தேதி மத்திய அரசு நிறுத்தியது.
அதன்பின் சர்வதேச அளவில் வர்த்தகரீதியான பயணிகள் விமானப் போக்குவரத்தை அரசு தொடங்க அனுமதிக்கவில்லை.
அதேசமயம், வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க, வந்தே பாரத் மிஷனை மத்திய அரசு கடந்த மேம 7-ம் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது.
இதுவரை 4 கட்ட வந்தே பாரத் மிஷன் முடிந்துள்ளன.
8.80 லட்சம் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
5-வது வந்தே பாரத் மிஷன் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோர் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி
அனைத்துப் பயணிகளும் இந்தியாவுக்குப் புறப்படும் முன் 72 மணி நேரத்துக்கு முன்பாக, சுயவிவரக் குறிப்பு விண்ணப்பத்தை (newdelhiairport.in) என்ற இணையதளத்தில் பதிவிட வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோர் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதில் 7 நாட்கள் பணம் செலுத்தித் தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதியும், அந்த 7 நாட்களில் நடத்தப்படும் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லாவிட்டால், வீட்டில் சென்று 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு உடல் நிலையைத் தாங்களே கண்காணித்துக் கொள்ளுதல் வேண்டும்.
கர்ப்பிணிப்பெண்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், குடும்பத்தில் ஏதேனும் இறப்பு நேர்தலால் வருவோர், முதியோர், தீவிரமான உடல்நலப் பிரச்சினை போன்ற தவிர்க்க முடியாத காரணங்களில் வருவோர் மட்டுமே வீட்டில் சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
தனிமைப்படுத்திக் கொள்ளுதலில் விதிவிலக்கு கோரும் பட்டியலில் இருப்போர் 72 மணிநேரத்துக்கு முன்பே, சுயவிவரம் தாக்கல் செய்யும்போது அதைக் குறிப்பிட வேண்டும். அதன் அடிப்படையில் மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும்.
பயணிகள் இந்தியா வந்தபின் பணம் செலுத்தி ஹோட்டலில் தங்கி தனிமைப்படுத்திக் கொள்வதில் விதிவிலக்கு கோரமுடியும். ஆனால், அவர்கள் பயணம் செய்வதற்கு 96 மணிநேரத்துக்கு முன் பிசிஆர் பரிசோதனை செய்து கொரோனா நெகட்டிவ் என்ற சான்றிதழைப் பயணத்துக்கு 72 மணிநேரத்துக்கு முன் தாக்கல் செய்யும் சுயவிவரக் குறிப்பில் இணைத்திருக்க வேண்டும். அந்த அறிக்கை உண்மைத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். பொய்யானதாக இருந்தால், அது கிரிமினல் குற்றமாகக் கருதி சம்பந்தப்பட்ட பயணி மீது நடவடிக்கை பாயும்.
என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.