இன்று காலை நடிகர் விவேக் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரின் நண்பரும் நடிகருமான வடிவேலு, கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
“இன்னிக்கு காலையில என்னுடைய நண்பன் விவேக் மாரடைப்பால் இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்துவிட்டேன்.
அவனும் நானும் நிறைய படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். அவனைப்பற்றி பேசும் போது துக்கம் தொண்டையை அடைக்கிறது.
ரொம்ப நல்லவன். உதவுற சிந்தனை அதிகம் உள்ளவன். நல்லவன். கலாம் ஐயா உடன் நல்ல நெருக்கமாக இருப்பான். அதே மாதிரி விழிப்புணர்வு பிரச்சாரம், மரம் நடுவது என இப்படி விஷயம் பண்ணுவான். ரொம்ப உரிமையாக என்னடா வடிவேலு, என்ன விவேக்கு என்று பேசிக் கொள்வோம்.
அவனை மாதிரி ஓப்பனாக பேசக் கூடிய ஆளே கிடையாது. எத்தனையோ கோடிக்கணக்கான ரசிகர்களில், அவன் எனக்கு ஒரு ரசிகன். நான் அவனுக்கு ரசிகன். அவன் பேசும் நான் வார்த்தையும் மனதில் பதியுற மாதிரியே இருக்கும். என்னைவிட எதார்த்தமாக, எளிமையாகப் பேசுவான். அவனுக்கு இப்படியொரு மரணம் என்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
என்னால் முடியல. இந்த நேரத்தில் என்ன பேசுவதென்று தெரியல. அவனுக்கு நேரில் அஞ்சலி செலுத்த என்னால முடியல. ஏன்னா. நான் மதுரையில் தாயாருடன் இருக்கேன். என்னோட நான் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விவேக்கின் குடும்பத்தினர் தைரியமாக இருக்க வேண்டும். விவேக் எங்கும் சென்றுவிடவில்லை. உங்களுடன் தான் இருக்கிறான். மக்களோடு மக்களாக நிறைந்திருக்கிறான். அவனுடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும்.”