சீனாவில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு இதுவரை சுமார் 2,70,000 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு எதிரான மருந்தினை கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் முயற்சித்து வருகிறது. எனினும் வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. சமீபத்தில் இந்த வைரஸுக்கான ‘தடுப்பு மருந்து’கண்டுபிடிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்தது.
இந்நிலையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவின் பெய்ஜிங்கை சேர்ந்த சினாவாக் பயோ டெக்னாலஜி என்ற நிறுவனம் தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ளது. அந்த தடுப்பு மருந்துக்கு ‘பிகோவாக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
குரங்கின் மீது நடத்தப்பட்ட சோதனை வெற்றி:
சினாவாக் நிறுவன ஆய்வாளர்கள், தடுப்பு மருந்தின் முதற்கட்ட சோதனையாக இந்திய வகையை சேர்ந்த குரங்கு ஒன்றுக்கு செலுத்தியுள்ளனர். அந்த தடுப்பு மருந்தானது குரங்கின் உடலில், வைரஸுக்கு எதிரான சக்தியை தூண்டியுள்ளது. அதன்பின் மூன்று வாரங்கள் கழித்து தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட குரங்கினையும், தடுப்பு மருந்து செலுத்தப்படாத குரங்கு ஒன்றையும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உட்படுத்தினர்.
பின்னர் ஒரு வாரத்திற்கு பிறகு சோதித்தபோது, தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட குரங்கின் நுரையீரலில் கொரோனா தொற்று இல்லாதது தெரியவந்தது. இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படாத மற்றொரு குரங்குக்கு வைரஸ் தாக்குதலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
பிகோவாக் தடுப்பு மருந்து குரங்குகளில் வெற்றிகரமாக செயல்படுவது உறுதியாகியுள்ளதால் அடுத்ததாக மனிதர்கள் மீது சோதனை செய்ய சீன ஆய்வாளர்கள் முயற்சித்து வருகிறார்கள்.