பிப்ரவரி 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
கொரேனா பரவல் காரணமாக மார்ச் மாத இறுதியில் திரையரங்குகள் மூடப்பட்டன. 7 மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்கள் முதல் உரிமையாளர்கள் வரை கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகினர். அதேபோல் திரைப்பட விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்களுகளை அக்டோபர் 15-ம் தேதி முதல் திறந்துகொள்ளலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.
இருப்பினும், தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட பின்னர் நவம்பர் மாதம் 10-ம் தேதி முதல் தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் 50 சதவீத இருக்கைகளில் வாடிக்கையாளர்களை அமரவைத்து திரையரங்குகளை திறக்கலாம் என அனுமதி வழங்கியது.
இந்தநிலையில், பிப்ரவரி 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து நேற்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மல்டிபிளக்ஸ் மற்றும் தனி திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.