ஜூலையில் துவங்கும் கல்வி ஆண்டிற்கு பதிலாக செப்டம்பர் மாதத்தில் கல்வி ஆண்டை துவங்கலாம் என பல்கலைகழக மானியகுழு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் மே மாதம் 3 ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக ஏப்.,மற்றும் மே மாதங்களில் நடைபெற இருந்த பல்கலைகழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் மற்றும் நீட், ஜேஇஇ உட்பட பல்வேறு தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பல்கலைகழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகளை எப்போது துவங்குவது என்பது குறித்து ஆராய 7 பேர் கொண்ட இரண்டு கமிட்டிகளை பல்கலை மானிய குழு அமைத்தது. அதில் ஒரு குழு வரும் கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை ஜூலை மாதத்திற்கு பதிலாக செப்டம்பரில் துவங்கலாம் எனவும், நீட், ஜே.இ.இ உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை ஜூன் மாதத்தில் நடத்தலாம் என பரிந்துரைத்துள்ளது.
மற்றொரு கமிட்டி பல்கலைகழகங்கள்,கல்லூரிகளில் உள் கட்டமைப்பு வசதி இருக்கும் பட்சத்தில் ஒத்தி வைக்கப்பட்டுள்ள செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம் எனவும், இல்லையெனில் ஊரடங்கு காலம் முடிந்த பின்னர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நேரடி எழுத்து தேர்வாக நடத்தலாம் எனவும் பரிந்துரைத்துள்ளது.
இதன் அடிப்படையில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் விரைவில் புதியஅறிக்கை வெளியிடப்படும் என கூறப்படுகிறது.