சென்னையில் தற்போது 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையத்திலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம், பாரிமுனை வழியாக வண்ணாரப்பேட்டை வரையிலும், அதேபோன்று வண்ணாரப்பேட்டையிலிருந்து பாரிமுனை, சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக கோயம்பேடு பேருந்து நிலையம் வரையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் அடுத்தகட்டமாக வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மொத்தம் 9.05 கி.மீ. தூரம் உள்ள இந்த வழித்தடத்தில் 8 மெட்ரோ ரயில் நிலையங்களை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.
வண்ணாரப்பேட்டை தியாகராயா கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, டோல்கேட், தாங்கல், கவுரி ஆஷ்ரம், திருவொற்றியூர், விம்கோ நகர் பகுதியில் ரயில் நிலையங்கள் (வண்ணாரப்பேட்டை மற்றும் திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே 8 மெட்ரோ நிலையங்களுடன் 2 நிலத்தடி மற்றும் 6 உயர்த்தப்பட்ட மெட்ரோ நிலையங்கள்) அமைக்கப்பட்டுள்ளன.
சோதனை ஓட்டத்தின்போது, டீசல் லோகோமோடிவ் வாகனம் அதன் முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்தது. சோதனையின்போது மொத்தம் 9.05 கி.மீ. அப்லைன் மற்றும் டவுன்லைன் இரண்டிலும் இயக்கவும் வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் வரையிலான முழு கட்ட முதல் விரிவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.