சிரிக்கின்ற போதிலும் , நீ அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே நான் இசையுடன் தோன்றுவேன்…!
ராஜா ,ரகுமானுக்கு பிறகு தமிழ் திரையிசையில் ஒரு மாஸ் நடிகனுக்கான ரசிகர்கள் கூட்டம் உள்ள ஒரு இசையமைப்பாளர் இளையராஜாவின் “இளைய ராஜா” யுவன்சங்கர் ராஜா ..!
யுவன் தன் திரையிசை பயணத்தை தொடங்கியபோது அவரின் வயது வெறும் 16 அரவிந்தன் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நூறு படங்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறார்…!
யுவன் ஏன் கொண்டாடப்பட வேண்டியவர்…?
படத்தின் வெற்றி , பாடல்களின் வெற்றி இதையெல்லாம் தாண்டி தமிழ் சினிமாவில் பல இளம் இயக்குனர்களின் முதல் படத்தின் விசிட்டிங் கார்டு யுவன் மட்டுமே யுவன் நினைத்து இருந்தால் வர்த்தக ரீதியாக பெரிய படங்களில் மட்டுமே பணியாற்றி இருக்க முடியும் ஆனால் யுவனின் தேர்வுகள் பெரும்பாலும் குறைந்த பொருட்செலவு உள்ள படங்கள் , இளம் இயக்குனர்களின் படங்கள் , முதல் பட இயக்குனர்கள் மட்டுமே அதில் பெருவாரியான படங்கள் வெற்றியும் பெற்றன தமிழ் சினிமாவிற்கு இன்றும் பல இளம் வயதினர் படையெடுத்து வருவதின் காரணம் யுவனும் ஒருவர்….!
எனக்கும் யுவனுக்குமான அறிமுகம் முதன் முதலில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் உள்ள இரவா பகலா பாடல்.அதன் பிறகு தீனா படத்தின் மூலம் யுவன் தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் எல்லோர் மனதிலும் ஆட்கொண்டார்…!
யுவன்- செல்வராகவன்
யுவன் – ராம்
யுவன் – வெங்கட்பிரபு
யுவன் – அமீர்
யுவன் – பாலா
யுவன்- ஹரி
யுவன்- விஷ்ணுவர்தன்
யுவன் – லிங்குசாமி
யுவன் – சிலம்பரசன்
என இவை பெரும்பாலும் முழு ஆல்பம் ஹிட் அடிக்கும் கூட்டணி …!
முன்பனியா பாடல் முதன்முதலில் கேட்கும்போது நிச்சயமாக இது ராஜாவின் இசைதான் என நினைக்கும்போது படத்தின் இசையமைப்பாளர் பெயர் யுவன்சங்கர் ராஜா எனப் பெயர் வந்தபோது வந்த ஆச்சரியம் அதிகம் அதுவரை மேற்கத்திய பாணியிலான இசையை மட்டும்தான் தருவார் என்ற விமர்சனத்தை உடைத்து மனதை உடைத்து போடும் மெல்லிசையையும் தர என்னால் முடியும் என ஆடிய யுவனின் ருத்ரதாண்டவம் அது ..!
அவன் இவன் பட பாடல் வெளியீட்டில் பாலா கூறயது என் படம் அவன் – இவன் -யுவன் இதுதான் படத்தின் விலாசமே ..!
செல்வராகவன் , அமீர் , ராம் , வெங்கட்பிரபு போன்ற பல இயக்குனர்களின் முதல் படத்தில் யுவனின் சம்பளம் சொற்பமே ஆனால் அதை பற்றிலாம் கவலைப்படாமல் தன்னுடைய இசையை எந்த அளவிற்கு மேம்படுத்தி தர முடியுமோ அந்த அளவிற்கு தன் உழைப்பை தந்த மாமனிதன் யுவன்..!
யுவன் – நாமு ..!
இந்த கூட்டணி தமிழ் சினிமாவில் தவிர்க்க இயலாத கூட்டணியாக இருந்த ஒன்று . இவர்களின் கூட்டணியில் வந்த முதல் படம் முதல் இறுதி படம் வரை வந்த பாடல்கள் பெரும்பாலும் தொண்ணூறுகளில் பிறந்தவர்களின் தேசிய கீதம் இந்த கூட்டணியில் வந்த பாடல்களின் மூலம்தான் காதல் கொண்டார்கள் , காதலில் தோல்வியா அதற்கும் இந்த கூட்டணி , வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வேண்டுமா அதற்கும் ஒரு பாடல் என எல்லா சென்டர்களிலும் ஹிட் மட்டுமே அடித்த கூட்டணி..!
பருத்திவீரன் ..!
ஒரு இசையமைப்பாளர் எத்தகைய வெற்றி பெற்றாலும் கிராமத்து இசையின் மூலம் மக்களை தொட்டால்தான் அது அந்த இசையமைப்பாளரின் முழு வெற்றியாக கருதப்படும் இந்த நிலை ரகுமானுக்கும் வந்துள்ளது இளையராஜா என்ற மேஸ்ட்ரோவின் கிராமத்து இசையை அடிக்க யாரும் இல்லையென்றாலும் கிட்டதட்ட ராஜாவின் இசையின் அருகே செல்பவர்கள்தான் வெற்றியாளர்கள் அவ்வாறு தன் முத்திரையை யுவன் நன்கு பதித்த படம் பருத்திவீரன். முழுக்க நகர பிண்ணனியில் வளர்ந்த யுவனின் இசை எடுபடுமா என்று சந்தேகம் வந்தபோது அனைவரும் மிரண்டு போகும் அளவிற்கான இசையை தந்து காட்டியவர் யுவன்…!
யுவனும் பிண்ணனி இசையும் :
தமிழில் தீம் மியூசிக்னா அது வெறும் கதாநாயகனை முன்னிறுத்துவதாக இருந்ததை மாற்றி அவ்வாறு இல்லாமல் காட்சிகளை முன்னநகர்த்தும் விதமாக மாற்றியதும், பின்னணி இசைக்காகவே ஒரு பெரிய ரசிக பட்டாளத்தையும் தவிர பிண்ணனி இசையில் இவையெல்லாம் பண்ண முடியுமா என்று வியக்க வைத்து மாஸ் காட்டியது யுவன்…!
தமிழ் சினிமாவில் இன்றும் அனைவரும் சிலாகித்து கூறும் பிஜிஎம் பில்லா படத்தின் பிஜிஎம் …!
யுவனின் குரல் :
ரகுமான் ஒருமுறை சொன்னது யுவனின் குரலில் ஒரு ஈரம் இருக்கு அதற்கு நான் பெரிய ரசிகன் என்று …!
வலியும் ஆறுதலும் ஒருசேர ஒரு குரல்ல கிடைக்கும் என்றால் அது யுவனின் குரலில்தான்..!
யுவனின் ஒரு ஆல்பம் வெளிவந்தால் முதலில் பார்ப்பது யுவன் என்ன பாடலை பாடி இருக்கிறார் என்பதே அந்த குரலில் உள்ள ஒரு சோகம் எத்தனை வலிமையானவர்களையும் நெகிழ வைக்கும் ..!
என் நிலைமையின் தனிமையை
மாற்றும் என் நேரமே நீதான்..!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யுவன்சங்கர் ராஜா …!