சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குக் கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேர்தலில் வெற்றி பெற வீர சபதம் ஏற்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
2016ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் நாள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த இடத்தில் தமிழக அரசு சார்பில் எண்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெயலலிதா நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்க தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் காலை முதலே மெரினாவில் அலை அலையாக திரண்டனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலில் நினைவிடத்திற்கான கல்வெட்டை திறந்து வைத்தார். பிறகு ரிப்பன் வெட்டி நினைவிட வளாகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் மலர் வளையம் வைத்தும், ஜெயலலிதா முழு உருவப்படத்துக்கு மலர் தூவியும் வணங்கி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவர்பின் ஒருவராக ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தைப் பார்வையிட்டுச் சென்றனர்.
நிகழ்ச்சயில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேர்தலில் வெற்றி பெற வீர சபதம் ஏற்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Pakistan tour of New Zealand | 2nd T20I | NZ vs PAK | Dream 11 Prediction | Fantasy Cricket Tips