உ.பி.யில் ஜூன் 30 வரை பொது இடங்களில் மக்கள் கூட தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த மே. 3 வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் ஊரடங்கு காலம் மே.3- நிறைவடைந்தாலும், சில கட்டுப்பாடுகளை விதித்து உ.பி. மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ஜூன் 30ம் தேதி வரை பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், கொரோனா தீவிரமாக பரவும் அபாயம் உள்ள பகுதிகளில், அந்தந்த மாநில சூழ்நிலைகளுக்கு ஏற்ப முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இதனை அந்தந்த பகுதிகளில் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சூழ்நிலையை பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.