புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட பெல்காம்-கோரக்பூர் சிறப்பு ரயிலில் பெற்றோருடன் பயணம் செய்த 3 மாதமேயான கைக்குழந்தை பாலுக்கு அழுவதைக் கண்டு போபால் ரயில் நிலையத்தில் பால் வாங்க ஓடோடி கடைக்குச் சென்று பால் வாங்கி வந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் இந்தர் சிங் ஓடத் தொடங்கி விட்ட ரயிலுடன் ஓடி ஜன்னல் வழியாக குழந்தையின் தாயிடம் பாலை கொடுத்துவிட்டார். இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தைப் பாராட்டி ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ரயில்வே காவலருக்கு ரொக்கப்பரிசு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். வேலையை இழந்து பசியும் பட்டினியுமாக கையில் காசில்லாமல் பல லட்சம் பேர் சொந்த கிராமங்களை நோக்கித் திரும்பிய அவலமான சூழலில் மனிதநேயத்துடன் செயல்பட்ட காவலர் இந்தர் சிங் யாதவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.