வாணியம்பாடி அருகே, மலை மீது, 9 கி.மீ., நடந்து சென்று, கிராம மக்களுக்கு, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, வணிக வரித்துறை அமைச்சர் வீரமணி வழங்கினார்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்னா மலைக்கு சாலை, மின்சாரம், மருத்துவ வசதிகள் இல்லை. மருத்துவம் மற்றும் பிரசவங்களுக்கு டோலி கட்டி, வாணியம்பாடிக்கு வர வேண்டிய நிலைமை உள்ளது.ஊரடங்கால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். இதனால், தானே நேரில் சென்று நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் வீரமணி அறிவித்தார்.
இதன்படி, நேற்று காலை, 10:00 மணிக்கு, திருப்பத்துார் கலெக்டர் சிவன் அருள், எஸ்.பி., விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் வீரமணி, வளையாம்பட்டு மலையடி வாரத்துக்கு காரில் சென்றார்.கொளுத்தும் வெயிலில், அங்கிருந்து, 9 கி.மீ., அனைவரும் நடந்து சென்றனர். மதியம், 2:00 மணிக்கு, நெக்னா மலைக்கு சென்றனர். அங்கு வசிக்கும், 2,000 பேருக்கு, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்களை, அமைச்சர் வீரமணி வழங்கினார். பின், மாலை, 5:00 மணிக்கு திரும்பினார்