தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
அந்த பொதுமுடக்கம் நாளையுடன் (ஜூலை.31) முடிய உள்ள நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது.
இதற்கிடையே மத்திய அரசு நேற்று (ஜூலை.29) வெளியிட்ட 3 ஆம் கட்ட தளர்வுகளில் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு இன்று (ஜூலை.30) அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ‘‘முழுமையான இணைய வழி, பகுதியளவு இணைய வழி, ஆஃப் லைன் மோட் ஆகிய முறையில் வகுப்புகள் நடத்தலாம்.
தொலைக்காட்சி மூலமும் பாடங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி.க்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தக்கூடாது.
1 முதல் 8 ஆம் வகுப்பு வரை 1.30 நேரமும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 3 மணி நேரம் மட்டுமே வகுப்பு நடத்தலாம்.
ஒவ்வொரு வகுப்புகளுக்கான நேரம் 30 முதல் 45 நிமிடங்கள் தான் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வகுப்புக்கும் 10 முதல் 15 நிமிடங்கள் இடைவேளை விட வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் 6 வகுப்புகளை மட்டுமே எடுக்க வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.