பாகுபலி படத்தின் உலகளாவிய வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்ஆர்ஆர்.
பாகுபலியின் வெற்றி பல சந்தோஷங்களை தந்தாலும் ராஜமெளலியின் மீதான எதிர்பார்ப்பை பல பல மடங்கு உயர்த்தி விட்டதுதான் உண்மை.
ஆர்ஆர்ஆர் படத்தின் அறிவிப்பு வந்த நாள் முதலே அதன் மீதான் எதிர்பார்ப்பும் இந்த முறை ராஜமெளலியின் தோல்வி உறுதி எனவும் கலவையான பேச்சுகள் சமூக வலைதளங்களில் எழுதப்பட்டு வந்தன.
ராம் சரண், ஜூனியர் என்டிஆர் என தெலுங்கு சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்களை திரையில் கொண்டு வந்து அவர்களின் ரசிகர்களை திருப்தி படுத்துவது என்பது பகீரத பிரயத்தனம் என அனைவரும் அறிந்ததே.
ராம்சரண் நெருப்பு, ஜூனியர் என்டிஆர் நீர் என்ற கான்சப்டில் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை பயணித்து இருக்கிறார் ராஜமெளலி அதிலும் குறிப்பாக இடைவேளை பகுதி பாகுபலியின் இடைவேளைக்கு சற்றும் குறைவில்லாத இந்திய சினிமாவின் மைல்கல் சண்டைக்காட்சியாக இருக்கும் வகையில் அனைவரின் உழைப்பும் தெரிகிறது.
படத்தில் ஆங்காங்கே இரு ஹீரோக்களின் ரசிகர்களுக்கு ஏற்ற காட்சிகளை ஆங்காங்கே தூவி பார்வையாளர்கள் எளிதாக கனெக்ட் ஆக கூடிய ஒரு படத்தை தெளிவாக தந்துள்ளார் ராஜமெளலி .
கதை இலாகா தனியாக ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு ,திரைக்கதை ,டெக்னலாஜி மற்றும் மேகிங்கில் மட்டும் இயக்குனர்கள் கவனம் செலுத்தினால் எத்தனை பெரிய படத்தையும் அனைவரும் ரசிக்கும்படி எடுக்கலாம் என்பதற்கு ராஜமௌலி ஒரு பெரிய உதாரணம்.
திரையரங்கில் பார்க்க வேண்டிய திரைப்படம் அப்போதுதான் அந்த பிரம்மாண்டத்தை நம்மால் உணர முடியும்.
படத்தின் மிகப்பெரிய பலம் :
- தொய்வில்லாத திரைக்கதை
- பிண்ணனி இசை
- ராம்சரணின் நடிப்பு
- ஜீனியர் என்டிஆரின் நடிப்பு
- பாடல்களை பயன்படுத்திய விதம்
- படத்தின் ஒளிப்பதிவு
- ஆரம்பம் முதல் இறுதி வரை படக்குழுவினரின் உழைப்பை திரையில் பார்க்கும்போதே உணர வைக்கிறது.
- படத்தின் நீளம் அதிகமாக இருந்தாலும் கதை சொன்ன விதத்திலும் , தனது பிரம்மாண்டத்திலும் அதனை பார்வையாளர்கள் உணராத அளவிற்கான மெனக்கெடல்.
மைனஸ் :
1) லாஜிக் இல்லாத சண்டை காட்சிகள்
2) மற்ற நடிகர்களுக்கு அந்த அளவிற்கு கதையில் இடமில்லாமல் போனது
மொத்தத்தில் ராஜமௌலியின் லாஜிக் இல்லாத மேஜிக் அவருக்கு வெற்றியை தந்துள்ளது.