ஏழைகளின் வங்கிக்கணக்கில் ரூ.7,500 செலுத்த வேண்டும் என, மத்திய அரசுக்கு மன்மோகன்சிங் தலைமையிலான காங்., குழு சிபாரிசு செய்துள்ளது.
கொரோனா பரவல் தொடர்பாக, கட்சியின் கருத்துகளை தெரிவிக்க, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் தலைமையில், 11 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை, காங்கிரஸ் தலைவர், சோனியா அமைத்துள்ளார். இந்த குழுவில், ராகுல், சிதம்பரம், மணீஷ் திவாரி, ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சுர்ஜேவாலா உட்பட, கட்சியின் மூத்த தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இக்குழுவின் முதல் கூட்டம் முடிந்த பின், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேட்டி அளித்த அக்கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: கூட்டத்தில், நாட்டில் ஏராளமான வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய, சிறு, குறு தொழில் நிறுவனங்களை, மீண்டும் புத்துயிரூட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்காக விரிவான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதனை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். வெளிமாநில தொழிலாளர்களின் பிரச்னை மற்றும் தானிய கொள்முதல் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பால், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், ஏழைகளின் வங்கி கணக்கில், தலா ரூ.7,500 செலுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு குழு சிபாரிசு செய்துள்ளது. ஜன்தன் வங்கி கணக்கு, அனைத்து ஓய்வூதிய கணக்குகள், பிரதமர்-கிஷான் திட்ட கணக்குகளில் இப்பணத்தை செலுத்த வேண்டும். மக்கள் மீது அரசுக்கு கருணை இருந்தால், இதற்கு நிதி ஒதுக்கும். காங்., குழு அளிக்கும் சிபாரிசுகளை அரசு ஏற்கும் என நம்புகிறோம்’ இவ்வாறு அவர் கூறினார்.