பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முக்கிய விசயம் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
சரியாக எத்தனை தடுப்பூசிகள் போட்டுள்ளோம் என கணக்கு பண்ணுவதில் ஆர்வம் செலுத்துவது நிறுத்தப்பட வேண்டும். அதற்கு பதிலாக, மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம் என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் இதுவரை குறைந்த அளவிலான மக்கள் தொகையினருக்கே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என்றும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளார். சரியான கொள்கை வடிவம் இருப்பின், இன்னும் சிறப்புடனும், விரைவாகவும் செயல்பட முடியும் என்பது நிச்சயம் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான உரிமம் பெற்ற நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும் என்றும் அவர் மத்திய அரசிடம் கேட்டு கொண்டுள்ளார்.
மேலும், புதிதாக வாங்கப்படும் தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு வெளிப்படையான நடைமுறையின் மூலம் பகிர்ந்தளிக்கப்படும் என்பதை அரசு தெரிவிக்க வேண்டும் என்றும், அவற்றில் 10 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு அவசர காலத் தேவைக்காக வைத்துக் கொள்ள வேண்டும் என மன்மோகன் சிங் யோசனை தெரிவித்துள்ளார். 45 வயதுக்கு குறைவானவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் முன்கள பணியாளர்கள் யார் என்பதை தீர்மானிக்க மாநில அரசுகளுக்கு சில நெகிழ்வுத்தன்மைகளை வழங்க வேண்டும் என்றும், 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தாலும் பள்ளி ஆசிரியர்கள், வாடகை கார் ஓட்டுனர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். உள்நாட்டில் தடுப்பூசி வினியோகம் குறிப்பிட்ட அளவில் மட்டுமே இருப்பதால், வெளிநாடுகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய உடனடியாக அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார்.