ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை போட்டியை அடுத்த ஆண்டு நடத்தலாம் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் பயிற்சியாளருமான சைமன் கேட்டிச் கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் பல விளையாட்டு போட்டிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன, சில தொடர்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் அக்.18 – நவ.15 வரை டி20 உலக கோப்பை போட்டி நடக்க உள்ளது. கொரோனாவால் நிலைமை மோசமாகி உள்ளதால், இந்த ஆண்டு மட்டுமல்ல, அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டிகளை கூட தள்ளி வைக்கலாமா அல்லது பார்வையாளர்கள் இல்லாமல் பூட்டிய அரங்கில் போட்டிகளை நடத்தலாமா என்று விளையாட்டு அமைப்புகள் ஆலோசித்து வருகின்றன .
உலக கோப்பை நடக்க இன்னும் 6 மாதங்கள் உள்ளதால் அதற்குள் நிலைமை சீராகும் என்று ஐசிசி நம்புகிறது. இது தொடர்பாக பல்வேறு கருத்துகள் வெளியாகி வரும் நிலையில், ‘டி20 உலக கோப்பை எல்லோருக்கும் முக்கியமானது. அதை நடத்த வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இப்போதைய சூழலில் டி20 உலக கோப்பை போட்டியை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும். பெண்கள் டி20 உலககோப்பை போட்டியை பிப்ரவரியில் நடத்தியதுபோல், ஆண்கள் டி20 உலக கோப்பையையும் வரும் பிப்ரவரியில் நடத்தலாம்’ என்று சைமன் கேட்டிச் கூறியுள்ளார்.