பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் ஆகஸ்ட் 26ம் தேதி 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், தமிழக அரசு கொரோனா தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தி வருகிறது.
இன்று மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை செயல்படுத்தும் வகையில், 26.08.2021 அன்று மாநகராட்சியின் சார்பில் ஒரு வார்டிற்கு 2 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் என மொத்தம் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கோவிட் தடுப்பூசிகள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் 200 சிறப்பு முகாம்கள் அந்தந்த வார்டில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் (அ) சமுதாய நல மருத்துவமனைகள் (அ) மினி கிளினிக்குகள் (அ) வார்டு அலுவலகங்கள் (அ) பகுதி அலுவலகங்கள் (அ) பள்ளிகள் போன்ற ஏதேனும் ஒரு இடத்தில் நடத்தப்பட உள்ளது.
மேலும், 200 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு வார்டிலும் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளன.
எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் 26.08.2021 அன்று தங்கள் பகுதிகளில் நடைபெறும் தடுப்பூசி சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் கீழ்க்கண்ட இந்த லிங்கில் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
http://covid19.chennaicorporation.gov.in/covid/mega_camp/