பதிவுத்துறை அலுவலகங்கள் 20ம் தேதி முதல் செயல்படும் என்றும், நாளொன்றுக்கு 24 டோக்கன்கள் வரை பதிவு செய்ய பதிவுத்துறை ஐஜி ேஜாதி நிர்மலாசாமி சார்பதிவாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு அலுவலகங்கள் வரும் 20ம் தேதி முதல் ஏ மற்றும் பி ஊழியர்களுடனும், 33 சதவீதம் பிரிவு சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுடன் செயல்பட ஆணையிட்டுள்ளது.
அலுவலக நுழைவாயிலில் ஒரு வாஷ் பேசின் அல்லது கைகழுவுமிடம் வைத்து சோப், தண்ணீர் வைத்து பதிவுக்கு வரும் பொதுமக்களை கைகளை கழுவிய பின்னர் அலுவலகத்திற்குள் நுழைய அறிவுறுத்த வேண்டும்.
* அலுவலர்கள் உள் நுழைவில் நுழையும் போது விரல் ரேகை பெறுவது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
* அட்டவணை IIயை அத்தாட்சி செய்தல், ஒளி வருடல் செய்யப்பட்ட ஆவண பிம்பத்தை உதவியாளர்/ இளநிலை உதவியாளர் அத்தாட்சி செய்தல். ஒரு கணினிக்கு ஒரு விரல் ரேகை இயந்திரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இப்பணிகளை மேற்கொள்ளும் போது பணியாளர்கள் அவர்களுக்கென தனியாக தேவைப்படும் விரல் ரேகை இயந்திரங்களை ஒதுக்கி பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
* பொதுமக்களிடம் விரல் ரேகை பெற ஒரு/இரு தனியான விரல் ரேகை இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும்.
* அலுவலகத்தில் உள் நுழையும் அனைத்து மக்களின் பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றை தேதி வாரியாக குறிப்பிட்டு தனியாக பதிவேடு பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறது.
அலுவலகத்தில் வரும் பொதுமக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்க அறிவுறுத்தப்படுகிறது. 55 வயதுக்கு மேற்பட்ட மற்றும் ஏற்கனவே உடல் நலம் குன்றியுள்ளவர்களை பதிவு பணிக்கு நியமிக்க வே்ணடாம்.
* போதிய நேர இடைவெளியில் பாதுகாப்பாக பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒரு மணி நேரத்திற்கு 4 டோக்கன்கள் வீதம் ஒரு நாளைக்கு 24 டோக்கன்கள் என மென்பொருள் மாற்றியமைக்கப்படடுள்ளது. 10 மணி முதல் 11 மணி வரை 4 டோக்கன்கள், 11 மணி முதல் 12 மணி வரை 4 டோக்கன்கள், பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை 4 டோக்கன்கள், 1 மணி முதல் 2 மணி வரை உணவு இடைவேளை, 2 மணி முதல் 3 மணி வரை 4 டோக்கன்கள், 3 மணி முதல் 4 மணி வரை 4 டோக்கன்கள், 4 மணி முதல் 5 மணி வரை 4 டோக்கன்கள் பெறும் நேரம் என மற்றியமைக்கப்பட்டுள்ளது.
* ஓர் ஆவணப்பதிவு நிறைவடைந்து சம்பந்தப்பட்ட நபர்கள் வெளியேறி பின்பே அடுத்த ஆவணப்பதிவினை சார்பதிவாளர்கள் பரிசீலிக்க வேண்டும். பொதுமக்கள் அனைத்துக் கட்டணங்களையும் இணைய வழியே செலுத்த வேண்டும்.
* கோவிட் பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அப்பகுதி விவரங்களை கலெக்டரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
* ஆவணத்தில் சம்பந்தப்பட்ட எந்த நபராவது அரசால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகளை சேர்ந்தவராக இருப்பின் அந்த ஆவணத்தை பதிவிற்கு பரிசீலிக்க தேவையில்லை.
* சார்பதிவாளர் அலுவலகம் கட்டுப்பாட்டு பகுதியில் அமைந்து பொதுமக்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த அலுவலகத்தை அதன் அருகிலிருக்கும் துணை பதிவுத்துறை தலைவர் அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், அருகே அமைந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யலாம்.
* கட்டுப்பாட்டு பகுதியில் குடியிருப்பு உள்ள பணியாளரை அலுவலகத்தில் பணிபுரிய அனுமதிக்க கூடாது.
* போக்குவரத்து வசதி இல்லாததால் அவ்வலுவலகத்தில் வர முடியாத நிலை இருப்பின் அவரின் இருப்பிடத்திற்கு அருகில் வேறு ஒரு அலுவலகம் இருப்பின் தற்காலிகமாக அந்த அலுவலகத்திற்கு நியமனம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சார்பதிவாளர் அலுவலகத்தை திறந்து பணி செய்வதன் மூலமாக சமூக இடைவெளியை கடைபிடிக்காத சூழ்நிலையும், ஊரடங்கு உத்தரவுக்கு கீழ்ப்படிய முடியாத சூழ்நிலையும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள மே 3ம் தேதி வரை ஆவண பதிவினை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம், தமிழ்நாடு அமைச்சு பணியாளர் சங்கம் கோரிக்கை வைத்த நிலையில் பதிவுத்துறை ஐஜி 20ம் தேதி செயல்படும் என்று அறிவித்து இருப்பது பதிவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.